செய்திகள்
விபத்து

வேப்பூர் அருகே இன்று காலை விபத்து- என்.எல்.சி. அதிகாரி பலி

Published On 2019-12-10 05:24 GMT   |   Update On 2019-12-10 05:24 GMT
வேப்பூர் அருகே இன்று காலை விபத்தில் என்.எல்.சி. அதிகாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேப்பூர்:

கடலூர் மாவட்டம் நெய்வேலி 5-வது வட்டத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 59). இவரது மனைவி விஜயா(55). இவர்களுக்கு வர்ஷினி, தீட்சிதா ஆகிய மகள்கள் உள்ளனர். இவர்கள் சென்னையில் டாக்டர்களாக உள்ளனர்.

ரமேஷ் நெய்வேலி என்.எல்.சி.யில் நகர நிர்வாக அலுவலகத்தில் சிவில் பிரிவில் துணை மேலாளராக பணியாற்றி வந்தார். அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து அவர் பெங்களூர் சென்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இரவு அவர் சிகிச்சை முடிந்து ஒரு காரில் வீடு திரும்பினார். அவருடன் அவரது மனைவி விஜயாவும் உடன் வந்தார்.

காரை நெய்வேலியை சேர்ந்த ராஜ்குமார் (25) என்பவர் ஓட்டி வந்தார். முன்பகுதியில் ரமேஷ் அமர்ந்திருந்தார்.

இன்று அதிகாலை 5 மணிக்கு வேப்பூர் அருகே சேலம் -கடலூர் சாலையில் விலாம்பூர் என்ற இடத்தில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது கார் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

பின்பு அந்த கார் சாலையோரம் இருந்த புளியமரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் காரில் இருந்த ரமேஷ் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

அவரது மனைவி விஜயா மற்றும் கார்டிரைவர் ராஜ்குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும். வேப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர்.

விபத்தில் காயம் அடைந்த விஜயா மற்றும் ராஜ்குமாரை மீட்டு வேப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் மேல் சிகிச்சைகாக விழுப்புரம் மாவட்டம் முண்டியம் பாக்கம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News