ஈரோட்டில் ஜவுளி வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை - பணம் கொள்ளை
ஈரோடு:
ஈரோடு கனிராவுத்தர் குளம், வசந்தம் நகரைச் சேர்ந்தவர் பாலமுரளி (வயது53) . ஜவுளி வியாபாரி. இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் பெங்களூரிலும், இளைய மகன் திண்டலிலும் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று பாலமுரளி ஜவுளி வியாபாரம் தொடர்பாக கோத்தகிரிக்கு சென்று விட்டார். இதனையடுத்து சாந்தி தனது இரண்டு மகன்களுடன் வீரப்பன் சத்திரத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இன்று காலை சாந்தி மீண்டும் மகன்களுடன் தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு சாந்தி அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் சென்று பார்த்த போது பொருட்கள் சிதறிக் கிடந்தன. வீட்டின் அறையில் இருந்த பீரோ கதவு திறக்கப்பட்டு அதில் இருந்த 6 பவுன் நகை, ரூ.75 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது.
மேலும் வீட்டின் பூஜை அறையில் இருந்த வெள்ளி குத்து விளக்கு, பூஜை பொருட்கள், வெள்ளிகலசம், வெள்ளித் தட்டு போன்ற பொருட் களையும் மர்ம நபர்கள் அள்ளிச் சென்றனர்.
இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இதை பகுதியில் அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.