செய்திகள்
புகார்

தேவகோட்டை அருகே பெண் தற்கொலை வழக்கில் திருப்பம் - கொலை செய்யப்பட்டதாக பேரன் புகார்

Published On 2019-10-12 09:15 GMT   |   Update On 2019-10-12 09:15 GMT
பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, அவர் கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதனால் புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

தேவகோட்டை:

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள நாச்சியார்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி செல்லாயி (வயது 62).

இவர் கடந்த 8-ந் தேதி வீட்டில் உள்ள மாட்டுக் கொட்டகையில் வாயில் நுரை தள்ளியபடி பிணமாக கிடந்தார். வி‌ஷம் குடித்து செல்லாயி தற்கொலை செய்திருப்பதாக கமுதி போலீசுக்கு தெரியாமல் உடலை உறவினர்கள் அடக்கம் செய்தனர்.

இந்த நிலையில் அவரது சாவில் மர்மம் இருப்பதாக மகள் வயிற்று பேரன் பாண்டி (20) தேவகோட்டை தாலுகா போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

அதில், தனது மாமாவும், செல்லாயி மகனுமான சோனைமுத்து (29) மீது சந்தேகம் உள்ளதாகவும், அவர் தாயை கொலை செய்திருக்கலாம் என்றும் புகாரில் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் சோனைமுத்துவை போலீசார் பிடித்தனர். கூடுதல் சூப்பிரண்டு மங்களேசுவரன், தேவகோட்டை தாலுகா இன்ஸ்பெக்டர் அந்தோணி செல்லத்துரை ஆகியோர், சோனைமுத்துவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் புதைக்கப்பட்ட செல்லாயி உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு இறந்த ஆறுமுகம் சாவிலும் சந்தேகம் இருப்பதாக கூறப்படுகிறது.

அவரையும் சோனை முத்து தான் கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News