செய்திகள்
தொடர் மழையால் மஞ்சூர் அருகே உள்ள குந்தா அணை நிரம்பியது. இதையடுத்து தண்ணீர் வெளியேற்றப்படும் காட்சி.

நீலகிரி மாவட்டத்தில் இடி-மின்னலுடன் கனமழை கொட்டியது

Published On 2019-09-25 10:27 IST   |   Update On 2019-09-25 10:27:00 IST
நீலகிரி மாவட்டத்தில் இடி-மின்னலுடன் கனமழை பெய்ததால் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பிவிட்டன. தொடர் மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக காலை மற்றும் மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் ஊட்டியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து விட்டு, விட்டு மழை பெய்தது.

மாலை 6 மணியளவில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை தொடர்ந்து 2 மணி நேரம் பெய்ததால் ஊட்டி கமர்சியல் சாலை, சேரிங்கிராஸ் சாலை, எட்டின்ஸ் சாலை, லோயர் பஜார், கூட்ஷெட் ரோடு, தொட்டபெட்டா செல்லும் சாலை உள்பட பல சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். இந்த மழை காரணமாக சுற்றுலா தலங்கள் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. இந்த மழை காரணமாக ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் கட்டப்பட்டு வரும் மேற்கூரை திடீரென சரிந்து விழுந்தது. அந்த சமயம் அங்கு பயணிகள் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

இதேபோல் நகராட்சி மார்க்கெட் அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக மார்க்கெட் பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்லமுடியாமல் அவதியடைந்தனர்.

காந்தல் பென்னட் மார்க்கெட் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஊட்டி-கூடலூர் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் மார்லிமந்து வனப்பகுதியில் மழை காரணமாக பலத்த சத்தத்துடன் இடி விழுந்தது. இதனால் ஊட்டி நகர் முழுவதும் மின் விநியோகம் தடைபட்டது. இந்த மழை நேற்று நள்ளிரவிலும் தொடர்ந்து பெய்தது.

இதனால் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடுங்குளிர் நிலவி வருகிறது. இந்த குளிர் காரணமாக வீட்டை விட்டு வெளியில் வரமுடியால் அவதிப்பட்டனர். ஒரு சில இடங்களில் தீ மூட்டி பொதுமக்கள் குளிர் காய்ந்து வருகின்றனர். பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் குடை பிடித்த படியும், சுவர்ட்டர் அணிந்தபடியும் சென்றனர்.

தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்வோர் சாக்கு அணிந்தபடி சென்றனர். கடும் பனிமூட்டம் நிலவுவதால் வாகனங்களில் செல்வோர்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி செல்கின்றனர். இதேபோல் ஊட்டியில் நடைபெறும் 2-வது சீசனுக்கு வந்த சுற்றுலா பயணிகள் தாங்கள் தங்கியிருக்கும் விடுதிகளை விட்டு வெளியில் வரமுடியாமல் உள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

இதேபோல் கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான கோடநாடு, சோலூர்மட்டம், கொலக்கொம்பை, கூக்கல்தொரை, மசக்கல், கட்டபெட்டு, அட்டப்பள்ளம் பகுதிகளிலும் நேற்று மதியம் முதல் கனமழை பெய்தது. இதனால் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பிவிட்டன. குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

கூடலூர்-கேரள எல்லையான வழிக்கடவு பகுதியில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது. அப்போது மழைதுளி சிவப்பு நிறத்தில் விழுந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனை அப்பகுதியை சேர்ந்தவர்கள் தங்களது மொபைல் போன்களில் படம்பிடித்து தங்களது உறவினர்களுக்கு அனுப்பினர். மேலும் சிலர் அந்த மழைநீரை குடம் மற்றும் பாட்டில்களில் சேகரித்து வைத்தனர். இதுகுறித்த தகவல் பரவியதும் கேரள வருவாய்த்துறை மற்றும் வானிலை ஆய்வு மையத்தினர் விரைந்து வந்து சோதனைக்காக மழைநீரை சேகரித்து சென்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், பருவநிலை மாற்றம் காரணமாக மழைத்துளி சிவப்பு நிறத்தில் விழுந்து இருக்கலாம். இருப்பினும் ஆய்வுக்கு பின்னரே அதற்கான காரணம் தெரியவரும் என்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Similar News