செய்திகள்
தாலி கட்டிய பிறகு தாலியில் மணமகன் குங்குமம் வைத்த காட்சி.

சிங்கப்பூர் பெண்ணை தமிழ் கலாசார முறைப்படி மணந்த சென்னிமலை வாலிபர்

Published On 2019-09-11 13:47 IST   |   Update On 2019-09-11 13:47:00 IST
மூன்று தலைமுறைக்கு முன்பு சிங்கப்பூர் சென்று குடியேறி வாழ்ந்து வந்த தனலட்சுமியை சென்னிமலை வாலிபர் காதலித்து, தமிழ் கலாசார முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
சென்னிமலை:

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்துள்ள பசுவபட்டி பிரிவு பகுதியினை சேர்ந்தவர், மோகன்குமார், பி.எச்.டி., பட்டதாரியான இவர் சிங்கப்பூரில் காற்றாலை மின்சார உற்பத்தியில் சீனியர் ஆராய்ச்சி என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.

அங்கு, நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் ராசாம்பாளையத்தினை பூர்வீகமாக கொண்ட குடும்பத்தினர் கடந்த மூன்று தலைமுறைக்கு முன்பு சிங்கப்பூர் சென்று குடியேறி வாழ்ந்து வருபவர் தனலட்சுமி இவர்களுக்கிடையே காதல் ஏற்பட்டு, திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

இது தொடர்பாக, இரு வீட்டு பெற்றோருடன் பேசி, தமிழ் கலாசார முறைப்படி, திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு, அதற்காக சிங்கப்பூரில் இருந்து மணமகள் குடும்பத்தினர் ஒரு வாரம் முன்பு வருகை தந்து கோவையில் தங்கினர். காங்கேயம்-சென்னிமலை ரோட்டில் உள்ள நால்ரோடு அருகே திருமண மண்டபத்தில் இவர்களின் திருமணம் நடைபெற்றது.

மணமகன் பட்டு வேட்டி - சட்டையிலும், மணமகள் பட்டு புடவையிலும் இருந்தனர். மணமகனுக்கு தாய் மாமன் துணை இருக்க, மணமகளுக்கு நங்கைகள் துணை இருக்க தாலி கட்டி, சிவாச்சாரியர் மந்திரம் ஓத உற்றார் உறவினர் வாழ்த்த திருமணம் நடந்தது.

திருமண விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள், டாக்டர் எம்.எஸ்., உதயமூர்த்தி எழுதிய ‘எண்ணங்கள்’ புத்தகம் இலவசமாக வழங்கினர்.

இதுபற்றி மணமகள் தனலட்சுமி கூறுகையில், நான் சிங்கப்பூரிலேயே பிறந்து வளர்ந்தேன், தமிழ் கலாசாரத்தினை படித்துள்ளேன். நான் இதுவரை தமிழ்நாடு வந்தது இல்லை, இங்குள்ள மருதாணி, பாரம்பரிய இசை, மக்களின் அன்பான அணுகுமுறை, உபசரிப்பு, போன்றவை தனக்கு மிகவும் பிடித்துள்ளதாக தெரிவித்தார்.




Similar News