செய்திகள்

பெருந்துறை அருகே நின்ற லாரி மீது பைக் மோதியது - 2 வாலிபர்கள் பலி

Published On 2019-06-24 05:01 GMT   |   Update On 2019-06-24 05:01 GMT
பெருந்துறை அருகே விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெருந்துறை:

சேலம் மாவட்டம், பனைமரத்துப்பட்டி, கம்மாளப்பட்டி பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்பவரது மகன் துரைசாமி (27). கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வரும் இவருக்கு திருமணமாகி ஆர்த்தி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.

இவர் தனது உறவினரான ஈரோடு, பெரிய சேமூர் பகுதியை சேர்ந்த ராமசாமி என்பரது மகன் சக்திவேல் (35) வுடன் தனது பைக்கில் பெருந்துறை வந்துள்ளார். பெருந்துறையில் இருந்து பெரியசேமூர் செல்வதற்காக பைபாஸ் ரோட்டில் பைக்கில் திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

பெருந்துறையை அடுத்துள்ள வாவிக்கடை பம்பிங் ஸ்டேசன் பகுதியில் சென்ற போது, ரோட்டோரத்தில் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரியின் பின்பகுதியில் எதிர்பாராத விதமாக பைக் மோதியது.

இதில் தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக பெருந்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் சுகவனம் தலைமையிலான போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இறந்து போன சக்திவேல் ஒரு ஹோட்டலில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு லாவண்யா என்ற மனைவியும் 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர். துரைசாமி ஓட்டி வந்த பைக் ரெஜிஸ்ட்ரேசன் செய்யப்படாத புதிய பைக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி யுள்ளது.

Tags:    

Similar News