செய்திகள்

கவுந்தப்பாடி அருகே கத்தி முனையில் பெண்களிடம் 25 பவுன் நகைகள் கொள்ளை

Published On 2019-06-18 12:40 GMT   |   Update On 2019-06-18 12:40 GMT
கவுந்தப்பாடி அருகே கத்தி முனையில் பெண்களிடம் 25 பவுன் நகைகளை கொள்ளையடித்த மூகமுடி கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை சேர்ந்தவர் துரைராஜ். தனியார் மருத்துவமனை ஊழியர். இரவு துரைராஜ் மளிகை கடைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் வீட்டில் துரை ராஜின் மனைவி சாந்தி, மகள் கிருத்திகா, மாமியார் பழனியம்மாள், உறவினர் மகள் அபிராமி ஆகியோர் இருந்தனர்.

அப்போது முகமூடி கொள்ளையர்கள் 4 பேர் வீட்டிற்குள் புகுந்து பெண்களின் கழுத்தில் கத்தியை வைத்து நகையை தருமாறு மிரட்டினர். இதனால் பயந்து போன அவர்கள் சத்தம் போட்டனர். அப்போது ஒரு கொள்ளையன் கத்தியால் தன் கையை அறுத்தான். இதில் ரத்தம் கொட்டியது. இதே போல் உங்கள் கழுத்தையும் அறுத்து விடுவோம் என மிரட்டினர்.

அதை பார்த்து பயந்து போன பெண்கள் கழுத்தில் இருந்த 10 சவரன் தங்க நகையை கொடுத்தனர். அதன் பின்னர் வீட்டில் இருந்த பீரோ சாவியை பிடுங்கிய கொள்ளையர்கள் பீரோவில் இருந்த 15 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்தனர். மொத்தம் 25 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்த அவர்கள் வீட்டின் பின் பக்க கதவு வழியாக வெளியேறி கரும்பு காட்டிற்குள் புகுந்து தப்பினர்.

இது குறித்து தகவல் அறிந்த கவுந்தப்பாடி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோட்டில் இருந்து கை ரேகை நிபுணர்கள் மற்றும் போலீஸ் மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டு கொள்ளையர் குறித்த தடயங்களை சேகரித்தனர். கொள்ளையர்கள் அனைவரும் 30 வயதிற்குள் இருந்தனர்.

மேலும் கொள்ளை சம்பவத்தின் போது 5 ரூபாய் மதிப்புள்ள சிறிய கத்தியையே வைத்திருந்துள்ளனர். துரை ராஜ் மகள் கிருத்திகா திருமணம் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் மகள் திருமணத்திற்காக நகை வைத்திருப்பதை தெரிந்தவர்களே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கொள்ளையரை பிடிப்பதற்காக 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

பெண்களின் கழுத்தில் கத்தி வைத்து நகை கொள்ளயடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடம் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News