செய்திகள்

கோபி அருகே மோட்டார் சைக்கிள்கள் விபத்து- தந்தை, மகள் பலி

Published On 2019-06-13 04:42 GMT   |   Update On 2019-06-13 04:42 GMT
கோபி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தந்தை மற்றும் மகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோபி:

கோபி அருகே உள்ள இண்டியம்பாளையத்தை சேர்ந்தவர் முருகேஷ் (வயது 36) செங்கல் சூளை தொழிலாளி. இவரது மனைவி பெயர் வைத்தீஸ்வரி.

சசிபிரியா (8) என்ற ஒரு மகள் உள்ளாள். இவள் 3-ம் வகுப்பு படித்து வந்தாள்.

நேற்று மதியம் மகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மகளை அழைத்துக்கொண்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு முருகேஷ் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

கோபி அருகே நல்ல கவுண்டன்பாளையத்தில் சென்றபோது எதிரே கோபி மொடச்சூரை சேர்ந்த சீனிவாசன் என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

இதில் எதிர்பாராத வகையில் 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு உடனடியாக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே முருகேஷ் பரிதாபமாக இறந்தார். மகள் சசிபிரியாவை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சசிபிரியாவும் பரிதாபமாக இறந்தாள்.

மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த சீனிவாசன் கோபி அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்தில் தந்தையும்- மகளும் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விபத்து குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News