செய்திகள்

கண்ணுக்கு தெரியாத காற்றிலும் தி.மு.க.வினர் ஊழல் செய்யக்கூடியவர்கள் - எடப்பாடி பழனிசாமி

Published On 2019-04-05 09:01 GMT   |   Update On 2019-04-05 09:01 GMT
கண்ணுக்கு தெரியாத காற்றிலும் ஊழல் செய்யக்கூடியவர்கள் தி.மு.க.வினர் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #LokSabhaElections2019 #EdappadiPalaniswami
சிவகாசி:

பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 13 நாட்களே உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சிவகாசியில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசும்போது, பட்டாசு உற்பத்தியாளர்கள் நேற்று இரவு என்னை சந்தித்தனர். அவர்களது கோரிக்கைகளை என்னிடம் தெரிவித்தனர். அவர்களிடம் பட்டாசு தொழிலில் உள்ள பிரச்சினையை தீர்க்க சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தேன். பட்டாசு தொழிலை பாதுகாக்க தமிழ்நாடு அரசு சட்டப்படியான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.

வெம்பக்கோட்டை, சிவகாசி, சாத்தூர் ஒன்றியங்களில் 750 கிராமங்கள் உள்ளன. கூட்டு குடிநீர் திட்டம் மூலம் இந்த கிராமங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

இதைத்தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூரில் தென்காசி தொகுதியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமியை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

மு.க.ஸ்டாலின் எங்களை மட்டும் குறை சொல்லி வாக்குகள் கேட்கிறார். ஆனால் நாங்கள் மக்கள் நலத்திட்டங்களை சொல்லி வாக்கு கேட்கிறோம்.

இந்த பகுதியில் அழகர் அணை திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு நெசவாளர்கள் அதிகம் உள்ளனர். அவர்களின் பிரச்சினையை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சாதாரண மக்களுக்கு கிடைக்கக்கூடிய 2000 ரூபாயைக்கூட மு.க.ஸ்டாலின் தடுத்து விட்டார். தேர்தல் முடிந்தவுடன் ரூ.2000 வழங்கும் திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும்.



வைகோவுடன் மு.க.ஸ்டாலின் சந்தர்ப்பவாத கூட்டணி வைத்துள்ளார். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், பட்டாசு தொழிலாளர்கள் ஆகியோரின் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும். நீர்மேலாண்மை மேம்படுத்தப்படும்.

மத்தியிலும், மாநிலத்திலும் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக நாங்கள் பா.ஜனதாவை ஆதரிக்கிறோம். தி.மு.க.வினர் கண்ணுக்கு தெரியாத காற்றிலும் ஊழல் செய்யக்கூடியவர்கள். விஞ்ஞான அடிப்படையிலும் மக்களை நம்பவைத்து ஊழல் செய்யக்கூடியவர்கள். தி.மு.க. ஆட்சி காலத்தில் குடும்பத்தை கட்டி காப்பார்கள். மக்களை பற்றி கவலைப்பட மாட்டார்கள். நாங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதுகாவலனாக இருப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரசாரத்தின்போது கே.டி.ராஜேந்திரபாலாஜி, சந்திரபிரபா எம்.எல்.ஏ., முன்னாள் மாவட்ட கவுன்சிலர் முத்தையா, ஒன்றிய செயலாளர் மயில்சாமி, நகர செயலாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

சிவகாசியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #LokSabhaElections2019 #EdappadiPalaniswami

Tags:    

Similar News