செய்திகள்

பா.ஜனதா, அ.தி.மு.க.விற்கு தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் - கனிமொழி எம்பி

Published On 2019-04-01 10:52 IST   |   Update On 2019-04-01 10:52:00 IST
பா.ஜனதா, அ.தி.மு.க.விற்கு தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் என்று கனிமொழி எம்பி கூறியுள்ளார். #BJP #Kanimozhi #ADMK

திருச்செந்தூர்:

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் கனிமொழி எம்.பி. திருச்செந்தூர் பகுதியில் வாக்கு சேகரித்தார். ஆலந்தலை, வீரபாண்டியன் பட்டணம் பகுதியில் அவர் பேசியதாவது:-

கடந்த 5 ஆண்டுகளில் மோடியின் ஆட்சியில் நாம் என்னென்ன அடக்கு முறைகளை சந்தித்தோம் என்பதை நாம் நினைத்து பார்க்க வேண்டும். மதத்தின் பெயரால் சாதியின் பெயரால் மக்களை பிரித்து ஆளக்கூடிய மத்திய அரசாங்கம், தமிழ்நாட்டுக்கு தேவையில்லாத நீட் போன்ற திட்டங்களை கொண்டு வந்து மக்கள் மீது திணித்து பிள்ளைகளின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கி விட்டது.

இதனால் வரும் தேர்தலில் பா.ஜனதா கூட்டணிக்கு எதிராக வாக்களித்து அவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். பா.ஜனதா நம் மொழியை, கலாசாரத்தை, இனத்தை அடக்கி ஒடுக்கி இந்தியா என்பது ஒருமுக தன்மையுள்ள நாடாக மாற்ற நினைக்கிறார்கள். மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால் நம்மை பிரிக்க நினைப்பவர்கள் தான் பா.ஜனதாவினர்.

இதனை அறிந்து நாம் தேர்தல் பணியாற்ற வேண்டும். நான் சொல்லவில்லை. தி.மு.க.வினர் சொல்லவில்லை. ஆனால் ஒரு ஆய்வறிக்கையின் படி இந்தியாவிலேயே மோசமான முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த முதல்-அமைச்சர் தமிழ் நாட்டுக்கு தேவையா என்று மக்கள் நினைத்து பார்க்க வேண்டும். எனவே நாம் பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க.விற்கு இந்த தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்.

தமிழ்நாட்டை தாரை வார்த்து கொடுத்த அ.தி.மு.க. ஆட்சியை வீழ்த்த வேண்டும். தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியை உருவாக்க வேண்டும். மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி உருவாக வேண்டும். நாங்கள் தமிழகத்தில் வேலைவாய்ப்பை உருவாக்க கூடிய அத்தனை முயற்சிகளையும் செய்வோம்.

இவ்வாறு அவர் பேசினார். #BJP #Kanimozhi #ADMK

Similar News