செய்திகள்
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டியளித்த காட்சி.

மோடி பலமான தலைவர் இல்லை - கே.எஸ்.அழகிரி

Published On 2019-03-07 12:04 IST   |   Update On 2019-03-07 12:04:00 IST
அதிமுக, பா.ஜனதா கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி, பிரதமர் மோடி பலமான தலைவர் இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். #KSAlagiri #Congress
தூத்துக்குடி:

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி வருகிற 13-ந் தேதி தேர்தல் பிரச்சாரத்திற்காக கன்னியாகுமரி வருகிறார். அதற்கான முன்னேற்பாடு பணிகளை பார்வையிடுவதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று தூத்துக்குடி வந்தார். பின்பு அங்கிருந்து கன்னியாகுமரிக்கு புறப்பட்டு சென்றார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-

கன்னியாகுமரியில் ராகுல்காந்தி பங்கேற்கும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்கின்றனர். ஜாதி மற்றும் மதத்தின் பெயரால் மக்களை பிரிக்கக்கூடாது என்ற எண்ணத்தில் அமைந்த கூட்டணி எங்களது கூட்டணி.



ஆனால் அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி ஜாதி, மதப்பெயரால் உருவான கூட்டணி. அந்த கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. மோடி பலமான தலைவர் என்று பலர் கூறுகின்றனர். ஆனால் அவர் பலமான தலைவர் இல்லை. பாகிஸ்தான் போர் விவகாரத்திலேயே அதனை தெரிந்து கொள்ளலாம்.

பிரதமர் மோடி அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளை மிரட்டி கூட்டணி அமைத்திருக்கிறார். அதில்தான் அவர் பலமானவர் என்று கூற முடியும். காமராஜரையும், மோடியையும் ஒப்பிட்டு தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை பேசியது தவறு. கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விபரம் கன்னியாகுமரியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத்தலைவர்கள் திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், எம்.எல்.ஏ.க்கள் ராமசாமி, விஜயதரணி, முன்னாள் எம்.எல்.ஏ. பீட்டர்அல்போன்ஸ், இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் முரளிதரன், சீனிவாசன், பொருளாளர் பாரகன் அந்தோணிமுத்து, வர்த்தக பிரிவு தலைவர் டேவிட் பிரபாகரன், எடிசன் மற்றும் பலர் உடனிருந்தனர்.  #KSAlagiri #Congress

Similar News