செய்திகள்

ஜெயலலிதாவின் படத்தை அதிமுக பயன்படுத்தக்கூடாது - டிடிவி தினகரன்

Published On 2019-03-07 11:47 IST   |   Update On 2019-03-07 11:47:00 IST
எதிர் தலைவர்களுடன் கூட்டணி வைத்துள்ளதால் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் அவர்கள் அணிக்காக ஜெயலலிதா படத்தை பயன்படுத்தக்கூடாது என்று டிடிவி தினகரன் கூறி உள்ளார். #TTVDhinakaran #ADMK
மதுரை:

பாராளுமன்ற தேர்தலுக்கு தி.மு.க. கூட்டணி அமைத்துவிட்டது. அ.தி.மு.க. கூட்டணி அமைத்து வருகிறது.

டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க. தனி அணி அமைத்து போட்டியிடுகிறது. எஸ்.டி.பி.ஐ. கட்சி இந்த கூட்டணியில் இணைந்துள்ளது. மேலும் ஒரு கட்சி இந்த கூட்டணியில் சேரும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து டி.டி.வி. தினகரன் அளித்த பேட்டி வருமாறு:-

நாங்கள் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளோம். அது தமிழகம் முழுவதும் மக்களிடம் சேர்ந்துள்ளது. எனவே அந்த சின்னத்தை கேட்பதில் தவறு இல்லை. இடைத்தேர்தல் வந்தால் அ.ம.மு.க.வுக்கு சின்னம் வழங்க வேண்டும் என்று அந்த உத்தரவில் உள்ளது. அ.தி.மு.க.வின் ஒரு அணிதான் அ.ம.மு.க. என்று குறிப்பிட்டு இருப்பதால் கட்சியின் பெயரை பதிவு செய்யவில்லை.

தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் உள்ளனர். கட்சிக்கான வாக்கு வங்கி என்பது முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி காலத்துடன் முடிந்து விட்டது. பாராளுமன்ற கூட்டணி தொடர்பாக பல கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தின.



நாங்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளவர்களுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை. ஆனால் ஜெயலலிதாவுக்கு எதிராக மோசமாக பேசியவர்களுடன் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் கூட்டணி வைத்துள்ளனர். எனவே அவர்கள் அணிக்காக ஜெயலலிதா படத்தை பயன்படுத்தக்கூடாது.

தற்போது ஒவ்வொரு தேர்தலிலும் புதிய கணக்குதான் எடுபடுகிறது. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட எங்கள் கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது.

இந்த இரண்டு கட்சிகளுக்கும் தலா ஒரு இடம் ஒதுக்கப்படும். மீதம் உள்ள 38 இடங்களில் அ.ம.மு.க. போட்டியிட்டு வெற்றி பெறுவோம். மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #ADMK

Similar News