செய்திகள்
கைது செய்யப்பட்ட ராணுவ வீரர் கிறிஸ்டோபர்.

குன்னூரில் 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ராணுவ வீரர் கைது

Published On 2019-02-19 09:46 IST   |   Update On 2019-02-19 09:46:00 IST
நீலகிரி மாவட்டம் குன்னூரில் 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ராணுவ வீரரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குன்னூர்:

நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளப் ரோட்டை சேர்ந்தவர் பவுலோஸ். இவரது மகன் கிறிஸ்டோபர் (வயது 27). இவர் ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். கடந்த 14-ந் தேதி கிறிஸ்டோபர் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார்.

இந்தநிலையில் இவர் குன்னூரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார்.

இது குறித்து மாணவியின் பெற்றோர் மாயமான தனது மகளை கண்டு பிடித்து தரும்படி மேல் குன்னூர் போலீசில் புகார் அளித்தனர்.

போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடிவந்தனர். அப்போது சிறுமியை ராணுவ வீரர் கிறிஸ்டோபர் வேளாங்கண்ணிக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது. போலீசார் சிறுமியை தேடுவதை அறிந்த ராணுவ வீரர் சிறுமியை அழைத்துக்கொண்டு குன்னூருக்கு வந்தார். அவரை சிம்ஸ் பூங்கா அருகே போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் ராணுவ வீரர் கிறிஸ்டோபர் சிறுமியை வேளாங்கண்ணிக்கு அழைத்து சென்று 2 நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

பின்னர் அவரை ஊட்டி மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதரன் 15 நாட்கள் கிறிஸ்டோபரை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து கிறிஸ்டோபரை போலீசார் குன்னூர் சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News