செய்திகள்

கைதிகள் சொகுசு வாழ்க்கை அம்பலம் - புழல் சிறை வார்டர்கள் 8 பேர் இடம் மாற்றம்

Published On 2018-09-18 02:51 GMT   |   Update On 2018-09-18 02:51 GMT
சென்னை புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கை அம்பலமானதால் 2 தலைமை வார்டர்கள் உள்பட 8 வார்டர்கள் வெவ்வேறு சிறைகளுக்கு அதிரடி மாற்றம் செய்யப்பட்டனர். #PuzhalJail
செங்குன்றம்:

சென்னை அருகே உள்ள புழல் சிறையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கு, பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய கைதிகள் உள்ளிட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சிலர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததாக புகைப்படங்கள் சமீபத்தில் அம்பலமாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



இது குறித்த புகாரின் பேரில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி அங்கிருந்த தொலைக்காட்சி பெட்டிகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து 5 கைதிகள் திருச்சி, சேலம், கோவை உள்ளிட்ட சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த சிறை காவலர்கள் மற்றும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க ஆலோசனை நடந்து வருகிறது.

இந்நிலையில் சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. அசுதோஸ் சுக்லா உத்தரவின் பேரில் தண்டனை சிறையில் பணிபுரிந்த தலைமை வார்டர்கள் விஜயராஜ் ஊட்டி கிளை சிறைக்கும், கணேசன் செங்கம் கிளை சிறைக்கும் மாற்றப்பட்டனர்.

இதேபோல் வார்டர்கள் பாவாடைராயர், செல்வகுமார் ஆகியோர் வேலூர் சிறைக்கும், ஜெபஸ்டீன் செல்வக்குமார், பிரதாப்சிங் ஆகியோர் கோவை சிறைக்கும், சிங்காரவேலன் சேலம் சிறைக்கும், சுப்பிரமணியன் திருச்சி சிறைக்கும் அதிரடியாக மாற்றப்பட்டனர்.  #PuzhalJail
Tags:    

Similar News