செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு - நீதிபதி அருணா ஜெகதீசனின் 3ம் கட்ட விசாரணை நிறைவு

Published On 2018-08-29 10:31 IST   |   Update On 2018-08-29 14:49:00 IST
தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையத்தின் 3-ம் கட்ட விசாரணை இன்றுடன் நிறைவு பெற்றது. #Thoothukudifiring
தூத்துக்குடி:

தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ந்தேதி நடந்த போலீஸ் துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிர் இழந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்தது.

இதையடுத்து கடந்த ஜூன் மாதம் 4-ந்தேதி இந்த ஆணையத்தின் முதற்கட்ட விசாரணை தொடங்கியது. பின்னர் பிரமாண பத்திரங்கள் பெறப்பட்டு, அதன் அடிப்படையில் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. 2-வது கட்ட விசாரணை கடந்த 9-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நடந்தது.



தற்போது 3-வது கட்டமாக தூத்துக்குடி தெற்கு பீச் ரோட்டில் உள்ள ஒருநபர் ஆணைய முகாம் அலுவலகத்தில் நேற்று முன்தினம் விசாரணை தொடங்கியது. இதில் துப்பாக்கிசூட்டில் காயம் அடைந்தவர்கள், பலியானவர்களின் உறவினர்கள் உள்பட மொத்தம் 19 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. நேற்று முன்தினம் 7 பேர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு இருந்தனர். ஆனால் 5 பேர் மட்டுமே ஆஜர் ஆனார்கள். முருகேசுவரி, பாலையா ஆகியோர் ஆஜராகவில்லை.

3-வது கட்ட விசாரணையின் 2-வது நாளான நேற்றும் 7 பேர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு இருந்தனர். இதில் தூத்துக்குடி தேவர் காலனியை சேர்ந்த ராமசந்திரன், முத்தம்மாள் காலனியை சேர்ந்த ராஜா, இந்திரா நகரை சேர்ந்த ராஜாசிங், கோவில்பிள்ளைவிளையை சேர்ந்த பெனிஸ்டன், திரேஸ்புரத்தை சேர்ந்த சிலுவை ஆகிய 5 பேர் ஆணைய அதிகாரி அருணா ஜெகதீசன் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். 2 பேர் வரவில்லை.

இந்நிலையில் இன்று ஒரு நபர் விசாரணை ஆணையம் முன்பு எஞ்சியவர்கள் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். இதைத்தொடர்ந்து நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையத்தின் 3-ம் கட்ட விசாரணை இன்றுடன் நிறைவு பெற்றது. #Thoothukudifiring


Tags:    

Similar News