செய்திகள்
பாதுகாப்பாக இருக்கும்படி சங்கமேஸ்வரர் கோவில் சார்பில் வைக்கப்பட்டிருந்த போர்டு.

பவானி கூடுதுறையில் பக்தர்கள் குளிக்க எச்சரிக்கை

Published On 2018-07-25 11:32 IST   |   Update On 2018-07-25 11:32:00 IST
பவானி கூடுதுறையில் குளிக்கும் இடத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை போர்டு வைக்கப்பட்டுள்ளது. #BhavaniKooduthurai
பவானி:

மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றுக்கு தொடர்ந்து 70 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வெறும் பாறைகளாக காட்சி அளித்த பவானி கூடுதுறையில் தற்போது ஆற்று வெள்ளம் சீறிப் பாய்ந்து செல்கிறது.

தற்போது ஆடி மாதத்தை யொட்டி ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் பவானி கூடுதுறையில் குளிக்க வருகிறார்கள்.

இவர்களுக்கு பவானி சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் எச்சரிக்கையும் அறிவுரையும் வழங்கப்பட்டு வருகிறது.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூடுதுறையில் குளிக்கும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கூடுதுறையில் குளிக்கும் இடத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை போர்டும் வைக்கப்பட்டுள்ளது.

அதில், “பக்தர்கள் கவனத்திற்கு... காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகளவில் உள்ளதால் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கப்படுகிறது.” என்று கூறப்பட்டு உள்ளது. மேலும் பவானி நகராட்சி சார்பிலும் காவிரி ஆற்றங்கரையோரம் தண்டோரா போட்டு மக்கள் எச்சரிக்கப்பட்டு வருகிறார்கள்.

கூடுதுறையில் இறங்கி குளிப்பவர்கள் கரை பகுதியில் நின்று குளித்தால் மட்டும்போதும் ஆர்வத்தில் ஆற்றில் இறங்கி தூரமான இடத்துக்கு சென்று விட வேண்டாம் என நகராட்சியும் பவானி போலீசாரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கடந்த 3 ஆண்டுக்கு பிறகு காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் காவிரி ஆற்று வெள்ளத்தை காண பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டு உள்ளது.

இவர்கள் பவானி காவிரி ஆற்றுப்பாலத்தில் கூட்டமாக நின்றபடி காவிரி ஆற்றில் கரைபுரண்டு செல்லும் வெள்ளத்தை பார்த்தபடி செல்கிறார்கள்.  #BhavaniKooduthurai


Tags:    

Similar News