செய்திகள்

கணவர் வாங்கி குடித்த காலி மதுபாட்டில்களை உடைத்து பெண்கள் திடீர் போராட்டம்

Published On 2018-06-29 15:05 GMT   |   Update On 2018-06-29 15:05 GMT
திருத்துறைப்பூண்டி அருகே கணவர் வாங்கி குடித்த காலி மதுபாட்டில்களை உடைத்து பெண்கள் திடீரென போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கொருக்கை ஊராட்சியில் டாஸ்மாக் கடை இல்லை. இதனால் இந்த பகுதியை சேர்ந்த குடிமகன்கள் திருத்துறைப்பூண்டிக்கு சென்று மதுபாட்டில்களை வாங்கி வந்து குடிக்கின்றனர்.

இதற்கிடையே கொருக்கை பகுதியில் சிலர் தங்களது வீடுகளில் திருட்டுத்தனமாக மதுபாட்டில் களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதை தடுத்து நிறுத்த கோரி அப்பகுதி பெண்கள், மற்றும் ஆண்கள் திருத்துறைப்பூண்டி போலீசில் புகார் செய்தனர். ஆனால் இதுகுறித்து போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் கொருக்கை பகுதியை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டனர். அவர்கள் தங்களது வீடுகளில் கணவர்கள் வாங்கி குடித்த காலி மதுபாட்டில்களை சேகரித்து கொண்டு பொது இடத்தில் வைத்து உடைத்தனர். ஒரே நேரத்தில் பெண்கள் அனைவரும் மதுபாட்டில்களை ரோட்டில் போட்டு உடைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யும் கும்பலை கைது செய்ய வேண்டும் என்று கோரி பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் திருத்துறைப்பூண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுபற்றி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதை ஏற்று பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதனையடுத்து வீடுகளில் வைத்து திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை விற்ற அதே பகுதியை ஜெயலலிதா (38), கலா(48), ராணி (47), மற்றும் திவாகரன் (22) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News