செய்திகள்
எஸ்.வி சேகருக்கு முன்ஜாமின் வழங்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு - எழும்பூர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து பேஸ்புக் பக்கத்தில் அநாகரீகமான கருத்துக்களை பகிந்த எஸ்.வி சேகருக்கு முன்ஜாமின் வழங்க சுப்ரீம் கோர்ட் மறுத்துள்ளது. #SVeShekher
புதுடெல்லி:
நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி சேகர் சில வாரங்களுக்கு முன்னர் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அநாகரீகமான கருத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிந்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததுடன் அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
போலீஸ் தன்னை கைது செய்யலாம் என்ற நிலையில், சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமின் மனு அவர் தாக்கல் செய்தார். ஆனால், அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், மனுவை நிராகரித்தனர். இதனை அடுத்து அவர் சுப்ரீம் கோர்ட்டை நாடினார். அவரது மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இன்று வரை அவரை கைது செய்ய தடை விதித்திருந்தனர்.
இன்று அவரது மனு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், சேகருக்கு முன்ஜாமின் வழங்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் 30-ம் தேதியே அவர் மீது குற்றப்பத்திரிக்கை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என கூறப்பட்டது.
இதனை அடுத்து, சேகர் விசாரணை நீதிமன்றமான எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.