செய்திகள்

திண்டுக்கல் அருகே மனைவியை துரத்தி விட்டு 2-வது திருமணம் செய்த தொழிலாளி

Published On 2018-05-04 11:12 GMT   |   Update On 2018-05-04 11:12 GMT
திண்டுக்கல் அருகே மனைவியை துரத்தி விட்டு 2-வது திருமணம் செய்த தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

வடமதுரை:

திண்டுக்கல் தோமையார் புரத்தைச் சேர்ந்தவர் சங்கிலிகருப்பு. (வயது 29). இவர் அங்குள்ள தோல் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் வடமதுரை பால்கேனி மேடு பகுதியைச் சேர்ந்த சிவகாமி (வயது 26) என்பவருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சங்கர் (8), பிரியதர்ஷினி (7) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படவே சிவகாமி தனது குழந்தைகளுடன் வடமதுரையில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு வந்து விட்டார். அதன் பிறகு சிவகாமியின் மாமனார், மாமியார் அங்கு வந்து அவரை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி விட்டு சென்று விட்டனர்.

சம்பவத்தன்று சிவகாமி தனது கணவரை தேடி சென்ற போது அவர் சென்னையில் வேலை பார்ப்பது தெரியவந்தது. மேலும் நிலாதேவி என்ற ஏற்கனவே திருமணமான பெண்ணை அவர் 2-வது திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்ததும் தெரியவந்தது.

இது குறித்து தனது கணவரிடம் கேட்டபோது அவர் தகாத வார்த்தைகளால் திட்டி இனிமேல் நம் இருவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறி விட்டார். இது குறித்து வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிவகாமி புகார் அளித்தார்.

ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளார். எஸ்.பி. சக்திவேல் உத்தரவின் பேரில் போலீசார் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த சங்கிலி கருப்புவை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News