செய்திகள்

ஸ்டெர்லைட் விவகாரத்தில் மக்களை பாதிக்காத வகையில் நடவடிக்கை- அமைச்சர் கருப்பணன்

Published On 2018-04-02 16:40 IST   |   Update On 2018-04-02 16:40:00 IST
ஸ்டெர்லைட் ஆலை குறித்து தீவிர விசாரணை நடத்தி மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரதம் நடக்கிறது.

இதற்காக பந்தல் அமைக்கும் பணி நடந்தது. இதனை அமைச்சர் கே.சி. கருப்பணன் இன்று பார்வையிட்டார். அப்போது கே.வி. ராமலிங்கம் எம்.எல்.ஏ., கே.எஸ். தென்னரசு எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர்.

அமைச்சர் கே.சி. கருப்பணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 6 வாரம் அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து நாளை வீரப்பன் சத்திரத்தில் ஈரோடு மாநகர், புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரதம் நடக்கிறது.

அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தலைமை தாங்குகிறார். நான் முன்னிலை வகிக்கிறேன். எம். எல்.ஏ.க்கள் கலந்து கொள்கிறார்கள்.

கமல்ஹாசன் போன்றவர்கள் மக்களை போராட்டத்துக்கு தூண்டுகிறார்கள்.

தீவிர விசாரணை நடத்தி மக்களுக்கு ஸ்டெர்லைட் ஆலையால் பாதிப்பு இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்கு தீங்கு தரக்கூடிய எந்த திட்டத்துக்கும் அரசு அனுமதி வழங்காது. நியூட்ரினோ, ஓ.என்.ஜி.சி. திட்டத்துக்கும் மத்திய அரசு மட்டுமே அனுமதி அளித்துள்ளது.

இவ்வாறு அமைச்சர் கே.சி. கருப்பணன் கூறினார். #Tamilnews

Similar News