செய்திகள்

திருப்பூர் எம்.பி. சத்யபாமாவின் கணவர் கைது

Published On 2018-03-30 08:32 IST   |   Update On 2018-03-30 11:45:00 IST
திருப்பூர் மக்களவை தொகுதி எம்.பி. சத்தியபாமாவை கொல்ல முயன்றதாக அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோபி:

திருப்பூர் எம்.பியாக இருப்பவர் சத்யபாமா. ஈரோடு மாவட்டம் கோபியில் வசித்து வருகிறார். இவரது கணவர் வாசு. கணவர்-மனைவி இடையே ஏற்கெனவே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சத்யபாமா எம்.பி. கோபி வந்திருந்தார். இவரை பார்க்க இவரது தம்பி சண்முகபிரபு (39) வந்திருந்தார்.

சத்யபாமா எம்.பி.யின் வீட்டு முன் சண்முக பிரபு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு எம்.பி.யின் கணவர் வாசு ஸ்கூட்டரில் வந்தார். வீட்டு முன் சண்முகபிரபு நின்று கொண்டிருப்பதை கண்டு ஆத்திரம் அடைந்தார். பிறகு ஸ்கூட்டரில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து “ஏண்டா நீ இங்கு வந்தாய்? என் குடும்ப பிரச்சினைக்கு நீதான் காரணம்” என்று கூறி அரிவாளுடன் பாய்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதை கண்ட சத்யபாமா எம்.பி மற்றும் அவரது மகன் ஆகியோர் அவரை தடுத்தனர். அவர்களுக்கும் வாசு கொலை மிரட்டல் விடுத்தாராம்.

அப்போது அங்கு வந்த சிலர் இந்த மோதலை தடுத்தனர். பிறகு இது குறித்து எம்.பி.யின் சகோதரர் சண்முக பிரபு கோபி போலீசில் புகார் செய்தார்.

சப்-இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி வழக்கு பதிவு செய்து எம்.பி.யின் கணவர் வாசுவை கைது செய்தார். இது தொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  #tamilnews

Similar News