செய்திகள்
கொடுமுடி கோர்ட்டில் ஆஜர்படுத்த தேவபிரசாத் அழைத்து வரப்பட்ட காட்சி

தோழியின் திருமணத்தை தடுக்க தலைமறைவாக இருந்த மாணவன்

Published On 2018-03-29 14:15 IST   |   Update On 2018-03-29 14:15:00 IST
ஊஞ்சலூர் அருகே தோழியின் திருமணத்தை தடுக்க தலைமறைவாக இருந்த மாணவன் சென்னை ஐகோர்ட்டில் திங்கட்கிழமை ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
கொடுமுடி:

ஊஞ்சலூர் அருகே உள்ள வெள்ளோட்டாம் பரப்பு வேலப்பம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் தேவபிரசாத் (வயது16). இவர் கொடுமுடியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கிறார்.

இவர் கடந்த மாதம் 21-ந்தேதி பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டுசென்றார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. அவர் மாயமானது குறித்து மலையம்பாளையம் போலீஸ் நிலையத்தில் சுப்பிரமணி புகார் செய்தார்.

மேலும் அவர் தனது மகனை கண்டுபிடித்து தருமாறு சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்தார். இதையடுத்து மலையம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவன் தேவபிரசாத்தை தேடிவந்தனர்.

இந்த நிலையில் நேற்று மலையம்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு தேவபிரசாத் வந்தார். அவருடன் அவரது தோழி ஜெகதீஸ்வரி என்ற பூமிகாவும் (16) வந்திருந்தார்.

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தோழியின் திருமணத்தை தடுக்கவே அவருடன் சேர்ந்து தேவபிரசாத் தலைமறைவானது தெரிய வந்தது.

ஊஞ்சலூர் அருகேஉள்ள காசிபாளையத்தை சேர்ந்தவர்தான் ஜெகதீஸ்வரி, இவரும் தேவபிரசாத்தும் தோழர்களாக இருந்தனர். இந்த நிலையில் ஜெகதீஸ்வரிக்கு அவரது வீட்டில் திருமண ஏற்பாடு செய்தனர்.

ஆனால் திருமணம் செய்து கொள்ள ஜெகதீஸ்வரிக்கு விருப்பம் இல்லை. எனவே திருமணத்தை தடுக்க தனது நண்பர் தேவபிரசாத்தின் உதவியை ஜெகதீஸ்வரி நாடினார்.

தன்னை நெல்லையில் உள்ள தனது தோழி சோனா வீட்டுக்கு கொண்டு சென்று விடுமாறு தேவபிரசாத்திடம் ஜெகதீஸ்வரி கூறினார். எனவே ஜெகதீஸ்வரியுடன் தேவபிரசாத் நெல்லைக்கு சென்றார்.

ஆனால் சோனா வீட்டில் இல்லை. எனவே தன்னை மணப்பாறை அருகே உள்ள கருப்பூரை சேர்ந்த மற்றொரு தோழி தீபிகா வீட்டுக்கு அழைத்து செல்லுமாறு தேவபிரசாத்திடம் ஜெகதீஸ்வரி கூறினார். எனவே ஜெகதீஸ்வரியுடன் தேவபிரசாத் மணப்பாறைக்கு சென்று கருப்பூரில் தீபிகாவின் வீட்டில் ஜெகதீஸ்வரியை விட்டார்.

பின்னர் அங்கிருந்து தேவபிரசாத் புறப்பட்டார். ஆனால் நீ ஊருக்கு சென்றால் உன்னை வைத்து நான் இருக்கும் இடத்தை கண்டுபிடித்துவிடுவார்கள். எனவே நீ ஊருக்கு செல்ல வேண்டாம் என்று தேவபிரசாத்திடம் ஜெகதீஸ்வரி கூறினார்.

எனவே கருப்பூரிலேயே தேவபிரசாத் இருந்துள்ளார். ஆனால் மலையம்பாளையம் போலீசார் அவர் இருக்கும் இடத்தை அறிந்து அவர்களை நெருங்கினர். எனவே நேற்று ஜெகதீஸ்வரியுடன் தேவபிரசாத் மலையம்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து நேற்று தேவபிரசாத்தை கொடுமுடி கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதால் வருகிற திங்கட்கிழமை தேவபிரசாத் சென்னை ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Similar News