செய்திகள்

பஸ் கட்டண உயர்வை கண்டித்து 29-ந்தேதி முதல் தி.மு.க. சார்பில் சிறை நிரப்பும் போராட்டம்: மு.க.ஸ்டாலின்

Published On 2018-01-26 09:25 IST   |   Update On 2018-01-26 09:25:00 IST
பஸ் கட்டண உயர்வை கண்டித்து 29-ந்தேதி முதல் தி.மு.க. சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
கடலூர்:

தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் கடலூரில் நேற்று நடந்தது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது:-

நாம் தாய் மொழிக்கு வீரவணக்கம் செலுத்துகிற வேளையில், தமிழ்த்தாய்க்கு ஒரு அவமரியாதை நடந்து இருக்கிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். இதற்கு வருத்தம் தெரிவிக்காவிட்டால் உரிய நடவடிக்கையில் தி.மு.க. இறங்கும். தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது தியானம் செய்ததாக கூறுவது வருந்தத்தக்கது.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்க முடியாதவருக்கு நாட்டுப்பண் பாடும்போது தியானம் வரவில்லையா? இப்போது எதற்கெல்லாமோ தியானம் செய்கிறார்கள். இந்த தியானம் தான் ஆன்மிக அரசியலா? புரியவில்லை.

திராவிட இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போயிருக்கிறார்கள். தமிழ் மொழிக்கு ஆபத்து ஏற்படும்போது அதை தடுத்து நிறுத்திய வரலாறு தி.மு.க.வுக்கு உண்டு. இந்தியை எதிர்க்கவில்லை, இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம். அன்று ஆரம்பித்த போராட்டம் இன்னும் நீறுபூத்த நெருப்பாக இருந்துகொண்டு தான் இருக்கிறது.

மத்தியில் ஆட்சி நடத்துகிற பாரதீய ஜனதா அரசு, தமிழ்நாட்டில் இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கிற சதிவலையில் ஈடுபட்டு வருகிறது. ஆசிரியர் தினத்தை குரு உற்சவம் என மாற்றி உள்ளது. சமஸ்கிருத வாரம், புதிய கல்வி கொள்கை, இந்தி பேசாத மாநிலங்களில் 10-ம் வகுப்பு வரை இந்தி கட்டாயம், ஏன் தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலை மைல்கல்லில் கூட இந்தியை கொண்டுவந்துள்ளது. ஆகவே 1965-ம் ஆண்டில் தமிழ் மொழிக்காக நடந்த போராட்ட களம் மீண்டும் உருவாகும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது. 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கூறியபோது, அதை கருணாநிதி உயர்த்தவில்லை. ஆனால் இந்த அரசு யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கட்டணத்தை உயர்த்தி உள்ளது.

பஸ் கட்டண உயர்வை கண்டித்து வருகிற 27-ந்தேதி (நாளை) தி.மு.க. போராட்டம் நடத்துகிறது. இந்த போராட்டத்துக்கு தோழமை கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. ஆனால் பாரதீய ஜனதா கட்சியும் போராட்டம் நடத்துகிறது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் இவர்கள், மாநில ஆட்சியை கேள்வி கேட்டு போராட்டம் நடத்துவது வேடிக்கை. பஸ் கட்டண உயர்வு குறித்து நான் எழுதிய கடிதத்துக்கு முதல்-அமைச்சர் இதுவரை எந்த பதிலும் சொல்லவில்லை.

27-ந்தேதி நடக்கும் போராட்டத்துக்கு பிறகும் அரசு செவி சாய்க்கவில்லை என்றால் வருகிற 29-ந்தேதி முதல் அனுமதிக்காத இடங்களிலும் தி.மு.க.வினர் மறியல் செய்வார்கள். சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவார்கள். இதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.

தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு நிலக்கரி வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது. ரூ.12,280 கோடிக்கு தரமற்ற நிலக்கரி வாங்கி உள்ளார்கள். அதில் ரூ.1,730 கோடி முதல் ரூ.3,035 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. இதற்கு முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், கரூர் அன்புநாதன் ஆகியோர் காரணம். இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

குட்கா விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது. இந்த விசாரணை முடிந்ததும் அமைச்சர், டி.ஜி.பி. சிறைக்கு செல்வார்கள். இந்த ஆட்சி விரைவில் கவிழும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார். #tamilnews

Similar News