செய்திகள்

வீர வணக்கநாள் பொதுக்கூட்டம்: கடலூரில் மு.க.ஸ்டாலின் இன்று மாலை பேசுகிறார்

Published On 2018-01-25 09:38 IST   |   Update On 2018-01-25 09:38:00 IST
கடலூர் மஞ்சக் குப்பம் மைதானத்தில் இன்று நடக்கும் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.

கடலூர்:

கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக் கூட்டம் கடலூர் மஞ்சக் குப்பம் மைதானத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடக்கிறது.

இந்த கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தலைமை தாங்குகிறார். இதில் தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.

பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து இன்று மதியம் கார் மூலம் புதுவை வருகிறார். அங்கு அவர் ஓட்டலில் ஓய்வு எடுத்துவிட்டு மாலை 5 மணிக்கு கடலூர் புறப்படுகிறார்.

வரும்வழியில் ஆல்பேட்டையில் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன்பின்பு அவர் மஞ்சக்குப்பத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

மு.க.ஸ்டாலின் பேசுவதற்காக மஞ்சக்குப்பம் மைதானத்தில் வடக்கு நோக்கி பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மைதானத்தில் மிகப் பெரிய கட்அவுட்கள், டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டு, மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் கடலூர் நகரின் நேதாஜிசாலை, பாரதி சாலை, இம்பீரியல் ரோடு உள்பட பல்வேறு இடங்களில் சாலையின் இரு புறமும் கட்சி கொடிகளும், வரவேற்பு தோரணங்களும், அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மஞ்சக்குப்பம் மைதானத்தை சுற்றி பல்வேறு இடங்களில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

வீரவணக்கநாள் பொது கூட்டத்தில் கலந்து கொள்ள கடலூர், குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், புவனகிரி காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து தி.மு.க. தொண்டர்கள் வேன், கார் மற்றும் லாரிகளில் வந்து குவிந்தனர். #tamilnews

Similar News