கடலூரில் நாளை கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிகாரிகளுடன் ஆலோசனை
கடலூர்:
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
முதல் முதலாக அவர் கோவைக்கு சென்று பஸ் நிலையத்தை தூய்மைபடுத்தும் பணியில் ஈடுபட்டார். அதன் பின்னர் அவர் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் ஒவ்வொரு மாவட்டமாக சென்று அதிகாரிகளுடன் ஆய்வு நடத்துவேன் என்று அறிவித்தார். அதன்படி நெல்லை மாவட்டம் சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார்.
அதைத்தொடர்ந்து அவர் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு சென்று ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதையடுத்து தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்துக்கு இன்று வருகிறார். மாலை 4.55 மணிக்கு விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் அரிமா சங்கம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது.
இந்த விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் இன்று மதியம் சென்னையில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் மூலம் விருத்தாசலம் வருகிறார்.
ரெயில் நிலையத்தில் இருந்து கார் மூலம் அவர் விழா நடைபெறும் இடத்துக்கு செல்கிறார். விழா முடிந்ததும் மாலை 6 மணி அளவில் கார் மூலம் கடலூர் வருகிறார். கடலூர் வரும் அவர் இரவில் சுற்றுலா மாளிகையில் தங்கி ஓய்வு எடுக்கிறார்.
கடலூரில் நாளை காலை 9.30 மணி முதல் 10 மணி வரை மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டப்பணிகளை பார்வையிடுகிறார். அதன் பின்பு சுற்றுலா மாளிகையில் அவர் காலை 10 மணி முதல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
இந்த கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தை பற்றியும், மாவட்டத்தில் நடைபெற்று வரும் மத்திய அரசு திட்டப்பணிகள் பற்றியும் படக்காட்சி மூலம் அதிகாரிகள் விளக்குகிறார்கள்.
கூட்டம் முடிந்தவுடன் நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை கவர்னர் பன்வாரிலால் புரோகித் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடத்துகிறார்.
அதன் பிறகு மதியம் 2 மணி அளவில் கவர்னர் பன்வாரில் புரோகித் கார் மூலம் சென்னை செல்கிறார்.
கவர்னர் வருகையையொட்டி கடலூர்-சிதம்பரம் சாலை, நெல்லிக்குப்பம் சாலை, நேதாஜி சாலை உள்பட முக்கிய சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளது.
கடலூர் பஸ் நிலையத்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு செய்யப்படலாம் என்று தெரிகிறது. இதைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவு பஸ் நிலையத்தை தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றது. அங்கு குவிந்து கிடந்த குப்பைகள் அகற்றப்பட்டன.
அதேபோல் கழிப்பறைகளையும் சுத்தம் செய்யும் பணியும் நடந்தது. பயணிகள் தங்கும் அறைகளையும் சுத்தப்படுத்தி, மின் விளக்குகளையும் சீரமைத்தனர்.
கவர்னர் வருகையை யொட்டி விருத்தாசலம், கடலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கவர்னரின் பாதுகாப்பு குழுவினர் நேற்று இரவே கடலூர் வந்தனர். அவர்கள் முன்னிலையில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை நடத்தினர்.