செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே திருநங்கை கொலையில் 3 பேர் கைது

Published On 2017-09-21 07:11 GMT   |   Update On 2017-09-21 07:11 GMT
ஸ்ரீபெரும்புதூர் அருகே திருநங்கை கொலையில் தொடர்புடைய 3 பேரை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

ஸ்ரீபெரும்புதூர்:

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிளாய் கிராமத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு எரிந்த நிலையில் எலும்பு கூடாக ஒரு பிணத்தை ஸ்ரீபெரும்புதூர் போலீசார் கைப்பற்றினர். சம்பவ இடத்திற்கு அருகே ரத்தக்கறை இருந்தது.

இறந்த நபர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தார்.

விசாரணையில் இறந்த நபர் ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்த திருநங்கை சின்னராசு (25) என்பது தெரியவந்தது. கிளாய் பகுதியை சேர்ந்த கார்த்திக் (25), விஜய் (20), செல்வ குமார் (20) ஆகிய மூன்று பேரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். போலீசாரின் விசாரணையில் சின்னராசுவை 3 பேரும் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.

கார்த்திக் போலீசாரிடம் அளித்த வாக்கு மூலம் வருமாறு:-

நானும் எனது நண்பர்கள் விஜய், செல்வகுமார் ஆகியோரும் கிளாய் ஏரிக்கரை அருகே அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தோம். அப்போது அவ்வழியாக சின்னராசு வந்தார். சின்னராசுவிடம் நைசாக பேசி ஒரிண சேர்க்கைக்கு அழைத்தோம். அதற்கு அவர் மறுத்தார். ஆத்திரத்தில் மது பாட்டிலை உடைத்து திருநங்கை சின்னராசுவின் கழுத்தில் குத்தி கொலை செய்தோம்.

சின்னராசு இறந்த அடையாளம் தெரியாமல் இருக்க அருகே இருந்த குப்பை மேட்டில் வைத்து தீவைத்து எரித்து விட்டு தப்பி சென்றோம். ஆனால் போலீசிடம் மாட்டிக் கொண்டோம்.

இவ்வாறு கார்த்திக் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து கார்த்திக், விஜய், செல்வகுமார் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News