செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் நாளை முதல் 6 நாட்கள் ஜவுளி நிறுவனங்கள் ஸ்டிரைக்

Published On 2017-07-05 12:54 IST   |   Update On 2017-07-05 12:55:00 IST
ஈரோடு மாவட்டம் முழுவதும் நாளை முதல் 6 நாட்கள் 5 ஆயிரம் ஜவுளி அதன் சார்ந்த நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் ரூ.180 கோடி வரை வர்த்தகம் மூடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஈரோடு:

ஜி.எஸ்.டி. மூலம் ஜவுளி ரகரங்களுக்கு 5 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் சார்பில் மூன்று நாள் வேலை நிறுத்த போராட்டம், உண்ணாவிரத போராட்டம்,மனு கொடுக்கும் போராட்டம் என பல்வேறு போராட்டங்கள் நடந்தன.

இதில் ஈரோடு மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் ஜவுளிகள் மற்றும் அதன் சார்ந்த நிறுவனங்கள் பங்கேற்றன. இதனால் ரூ.90 கோடி வரை வர்த்தகம் இழப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் கூட்டம் ஈரோட்டில் நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து சங்க தலைவர் ரவிச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது.-

ஜவுளிக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி.வரி விதிப்பை ரத்து செய்வது குறித்து மத்திய நிதி அமைச்சர், ஜவுளித்துறை அமைச்சர் ஆகியோரை நேரில் சந்தித்து மனு கொடுக்க பல முறை நேரம் ஒதுக்கக்கோரியும் அவர்களை கலந்தாலோசிக்க அனுமதி கிடைக்கவில்லை.எனவே ஜவுளி வணிகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் குறைகளை நேரில் தெரிவிக்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

வேறு வழியின்றி நாளை முதல் வரும் 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை)வரை ஜவுளி மொத்த வணிக நிறுவனங்களை அடைத்தும், விசைத்தறி கூடங்களில் உற்பத்தி நிறுத்தம் செய்தும் எங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய முடிவு செய்துள்ளோம்.

இதன்படி ஈரோடு மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் ஜவுளி அதன் சார்ந்த நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் ரூ.180 கோடி வரை வர்த்தகம் மூடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News