செய்திகள்

கோபியில் வறுமை காரணமாக தாய்-மகள் தற்கொலை

Published On 2017-07-01 16:39 IST   |   Update On 2017-07-01 16:39:00 IST
கோபியில் வறுமை காரணமாக தாய், மகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோபி:

கோபி சீத்தாலட்சுமி புரத்தை சேர்ந்தவர் முருகேசன். இவர் இறந்துவிட்டார். இவரது மனைவி சாந்தி (வயது 35). இவர்களது மகன் பார்த்திபன் (15), மகள் ராஜேஸ்வரி (13).

பார்த்திபன் 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். ராஜேஸ்வரி கோபியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

சாந்தி சமையல் வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு 3 பேரும் வீட்டில் இருந்தனர். பார்த்திபன் தூங்கிக்கொண்டு இருந்தார்.

அப்போது சாந்தியும், ராஜேஸ்வரியும் வி‌ஷம் குடித்தனர். இதனால் அவர்கள் வாந்தி எடுத்தனர். இந்த சத்தம் பக்கத்து வீட்டில் வசிக்கும் சாந்தியின் தாய் லட்சுமிக்கு கேட்டது.

அவர் வந்து பார்த்தார். வாந்தி எடுப்பது குறித்து கேட்டார். அப்போது சாந்தியும், ராஜேஸ்வரியும் வி‌ஷம் குடித்ததாக கூறினர்.

இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் சேர்ந்து 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே சாந்தி பரிதாபமாக இறந்தார். ராஜேஸ்வரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் கோபி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது சாந்தியும், ராஜேஸ்வரியும் எழுதி கையெழுத்திட்ட சோக கடிதம் சிக்கியது.

அதில், தங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. சரியான வேலை இல்லாததால் குடும்பம் நடத்த முடியவில்லை. வறுமை வாட்டுகிறது. எனவே தற்கொலை செய்து கொண்டதாக அவர்கள் எழுதி இருந்தனர்.

இது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Similar News