செய்திகள்

ஈரோடு அருகே சொத்து தகராறு: தந்தை-பாட்டி துப்பாக்கியால் சுட்டு படுகொலை

Published On 2017-06-29 13:34 IST   |   Update On 2017-06-29 13:34:00 IST
ஈரோடு அருகே தந்தை-பாட்டியை சொத்துக்காக வாலிபர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு:

ஈரோடு அருகே உள்ளது சித்தோடு. இந்த ஊரை அடுத்துள்ள வசுவப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 55). இவர் ஈரோடு மேட்டூர் ரோட்டில் யுனைடெட் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஊழியர் ஆக பணிபுரிந்து வந்தார். இவரது தாயார் பாவாயி (75).

பழனிசாமியின் மகன் சந்தோஷ்குமார் (23). இவர் ஈரோட்டில் மெடிக்கல் கடை நடத்தி வருகிறார்.

பழனிசாமிக்கும் மகன் சந்தோஷ் குமாருக்கும் கடந்த 3 மாதமாக சொத்து தகராறு இருந்து வந்தது. “உன் பெயரில் உள்ள சொத்துக்கள் யாவையும் என் பெயரில் மாற்றி எழுதி கொடு” என்று சந்தோஷ்குமார் தந்தையிடம் அடிக்கடி கேட்டு தகராறு செய்து வந்தார்.

இந்த நிலையில் இன்று காலை 6.30மணியளவில் வசுவப்பட்டியில் உள்ள தனது தாயார் பாவாயியை பார்க்க பழனிசாமி வந்திருந்தார். அப்போது அங்கு மகன் சந்தோஷ்குமாரும் வந்துள்ளார். இருவருக்கும் இடையே மீண்டும் சொத்து பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் தந்தை பழனிசாமி, “சொத்தை எழுதி கொடுக்க இப்போது என்ன அவசியம் அதெல்லாம் முடியாது பிறகு பார்த்து கொள்ளலாம்” என்று கூறி உள்ளார்.

“அதெல்லாம் முடியாது இப்போதே எனது பெயரில் சொத்தை எழுதி கொடுங்கள்” என்று கேட்டு தகராறில் மகன் ஈடுபட்டார்.

தந்தை-மகன் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர் சந்தோஷ்குமார் வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து தந்தை என்றும் பாராமல் சுட்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பாட்டி பாவாயி “அடப்பாவி என்ன காரியம் செய்து விட்டாய்?” என்று ஓடி வந்து தடுக்க முயன்றார். அவரையும் சந்தோஷ்குமார் துப்பாக்கியால் சுட்டான்.

இந்த கொடூர செயலில் தந்தை பழனிசாமி அவரது தயார் பாவாயி ஆகிய இருவரும் குண்டு துளைத்து ரத்த வெள்ளத்தில் சாய்ந்து துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர்.

இருவரும் கீழே சுருண்டு விழுந்து இறந்ததும் சந்தோஷ்குமார் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இது பற்றி தகவல் கிடைத்ததும் சித்தோடு மற்றும் பவானி, ஈரோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News