செய்திகள்
தற்கொலை செய்த பாலசந்தர்.

ஈரோட்டில் காதல் கைகூடாததால் வி‌ஷம் குடித்த பள்ளி மாணவியின் தந்தை தற்கொலை

Published On 2017-06-24 11:35 GMT   |   Update On 2017-06-24 11:35 GMT
ஈரோட்டில் காதல் கைகூடாததால் மகள் வி‌ஷம் குடித்த விரக்தியில் அவரது தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு:

ஈரோடு சூளை ஓடைப்பள்ளம் மல்லி நகர் அரசு குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பாலசந்தர் (வயது 55). இவரது மனைவி கமலவேணி. இவர்களது மகள் அக்‌ஷயா (17).

இவர் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் உள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கும் திருச்சி சட்டக் கல்லூரியில் படித்த சித்தோடு கொங்கம் பாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கும் காதல் மலர்ந்தது.

பிரகாஷின் அக்காள் வீடு மல்லி நகரில் உள்ளது. அங்கு பிரகாஷ் அடிக்கடி வந்து சென்றபோது இவர்களுக்குள் காதல் மலர்ந்தது. ஆனால் இருவரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர் என்பதால் எதிர்ப்பு கிளம்பியது.

காதல் கைகூடாததால் காதலர்கள் மனம் வருந்தினர். கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டை விட்டு வெளியேறிய அக்‌ஷயாவும், பிரகாசும் ரெயிலில் ஏறி திருச்சிக்கு சென்றனர்.

திருச்சி பொங்கி கார்னரில் 2 பேரும் வி‌ஷம் குடித்தனர். இதில் பிரகாஷ் பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடிய அக்‌ஷயா திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அக்‌ஷயாவின் தாய் கமலவேணி உடன் இருந்து கவனித்து வருகிறார்.

திருச்சிக்கு சென்றிருந்த பாலசந்தர் 2 நாட்களுக்கு முன்பு ஈரோட்டுக்கு வந்தார். ஆனால் அவர் மனம் உடைந்த நிலையிலேயே காணப்பட்டார். நேற்று இரவு வரை அக்கம் பக்கத்தினர் அவரை பார்த்தனர்.

இன்று காலை அவரது நடமாட்டம் இல்லை. அக்கம் பக்கத்தினர் அவரை அழைத்து பார்த்தனர். எந்த பதிலும் வராததால் பூட்டிக் கிடந்த வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தனர்.

அப்போது பாலச்சந்தர் தூக்கில் பிணமாக தொங்கினார். அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள் இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் வந்து வீட்டுக்குள் சென்று பாலச்சந்தரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

காதல் கைகூடாததால் மகள் வி‌ஷம் குடித்த விரக்தியில் அவரது தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News