செய்திகள்

ஈரோட்டில் வீட்டின் பூட்டை உடைத்து 80 பவுன் நகை கொள்ளை

Published On 2017-04-08 17:17 IST   |   Update On 2017-04-08 17:17:00 IST
ஈரோட்டில் வீட்டின் பூட்டை உடைத்து 80 பவுன் நைக மற்றும் ரூ.2 லட்சத்தை அள்ளிச்சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

ஈரோடு, கருங்கல்பாளையம், இந்திரா நகரை சேர்ந்தவர் சாந்தி (வயது47). இவரது கணவர் பழனிசாமி. உடல் நலம் சரியில்லாமல் இறந்து விட்டார். இவர்களுக்கு விக்னேஷ் என்ற மகனும், மோகனா என்ற மகளும் உள்ளனர்.

இதில் விக்னேஷ் கடந்த ஒரு வருடத்துக்கு முன் இறந்து விட்டார். மகள் மோகனா திருமணமாகி நாமக்கல் மாவட்டத்தில் கணவருடன் வசித்து வருகிறார்.

சாந்தி ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். வியாபாரத்துக்காக அதிகாலை 3.30 மணிக்கு எழுந்து நேதாஜி மார்க்கெட்டுக்கு செல்வது வழக்கம்.

அதே போன்று இன்று வழக்கம் போல் சாந்தி வியாபாரத்துக்காக நேதாஜி மார்க்கெட்டுக்கு சென்று விட்டார்.

இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சாந்தியின் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவையும் உடைத்து அதில் இருந்த 80 பவுன் நகை மற்றும் 2 லட்சத்தை அள்ளி சென்றுள்ளதாக தெரிய வருகிறது.

இது பற்றி தகவல் கிடைத்தவுடன் தனது வீட்டுக்கு அலறி அடித்து கொண்டு ஓடி வந்தார். அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடைப்பதையும், பீரோ உடைக்கப்பட்டு இருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து கருங்கல் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை சோதனையிட்டனர்.

மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து சோதனையிட்டு வருகிறார்கள். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் 80 பவுன் நகையும், ரூ.2 லட்சம் பணமும் திருட்டு போய் இருப்பது தெரிய வருகிறது. முழுமையான தகவல் இன்னும் தெரியவில்லை.

இது குறித்து கருங்கல் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

வீடுகள் நிறைந்த இந்த பகுதியில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News