செய்திகள்

அதிகார பிரச்சினை: கவர்னர் கிரண்பேடி மீது நமச்சிவாயம் கடும் தாக்கு

Published On 2017-01-09 19:30 IST   |   Update On 2017-01-09 19:30:00 IST
புதுவையில் கவர்னருக்கே அதிகாரம் உள்ளது என்றால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாங்கள் எதற்காக இருக்கிறோம்? என நமச்சிவாயம் கேள்வி எழுப்பினார்.

புதுச்சேரி:

மகிளா காங்கிரஸ் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் நமச்சிவாயத்திடம், ‘கவர்னர் தனக்கே அதிகாரம் இருப்பதாகவும், தன்னை மாற்ற முடியாது என்றும் கூறியுள்ளாரே?’ என நிருபர்கள் கேள்வி கேட்டனர்.

அதற்கு அமைச்சர் நமச்சிவாயம் பதிலளித்து கூறியதாவது:

புதுவை, சட்டமன்றம் உள்ள யூனியன் பிரதேசம். இங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி உள்ளது. மேலும், ஜனநாயகபூர்வமான ஆட்சி நடந்து வருகிறது. சட்டமன்றத்தில் மக்களுக்கான திட்டங்களை இயற்றி, செயல்படுத்தி வருகிறோம். அதிகாரம் யாருக்கு உள்ளது? என்பது அனைவருக்கும் தெரியும்.

கவர்னருக்கே அதிகாரம் உள்ளது என்றால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாங்கள் எதற்காக இருக்கிறோம்? கவர்னரே ஆட்சி செய்யட்டும். காங்கிரஸ் அரசு ஒருபோதும் நிதியை தவறாக பயன்படுத்தாது.

நாராயணசாமி முதல்-அமைச்சராக இருக்கும்போது, இதுபோன்ற தவறுகள் நடைபெற வாய்ப்பே இல்லை. மக்கள் துணையுடன் எதிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News