செய்திகள்
ஆம்பூர் டி.எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்த தீபா ஆதரவாளர்கள்.

ஆம்பூரில் தீபா ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க.வினர் மோதல்

Published On 2017-01-09 10:58 IST   |   Update On 2017-01-09 10:58:00 IST
ஆம்பூரில் அ.தி.மு.க. பிரமுகர்கள் - தீபா ஆதரவாளர்கள் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆம்பூர்:

வேலூர் மேற்கு மாவட்டத்தில் குறிப்பாக மாதனூர், ஆம்பூர் பகுதிகளில் மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு அ.தி.மு.க.வினர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். ஆம்பூர், மாதனூர் பகுதிகளில் ‘‘அகில இந்திய புரட்சி தலைவி ஜெ.தீபா பேரவையை’’ தொடங்க ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக 3 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க களத்தில் இறங்கி தீபாவுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். தீபா பேரவையை தொடங்க உறுப்பினர் சேர்ப்பு படிவங்கள் விநியோகம் செய்யப்படுகிறது. முதல் கட்டமாக 5 ஆயிரம் உறுப்பினர் படிவங்கள் அச்சிட்டு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து படிவங்கள் வழங்கப்பட்ட 5 ஆயிரம் உறுப்பினர்களையும் திரட்டி குடியாத்தத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வரும் 11-ந் தேதி (புதன்கிழமை) ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்பட இருந்தது. கூட்டம் முடிந்த பிறகு தீபாவை சந்திக்கவும் ஆதரவாளர்கள் திட்டமிட்டு இருந்தனர்.

இதையொட்டி, தீபா ஆதரவாளரான அ.தி.மு.க.வை சேர்ந்த ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் கார்மேகம் (வயது 59)) என்பவர் ஆம்பூர் உமர் ரோட்டில் உள்ள தனக்கு சொந்தமான கம்ப்யூட்டர் சென்டரில் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

கூட்டத்தில் தீபா ஆதரவு ஒருங்கிணைப்பு குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது அங்கு பி.கஸ்பாவை சேர்ந்த அன்பரசன் தலைமையில் அ.தி.மு.க. பிரமுகர்கள் வந்தனர். அ.தி.மு.க.வை பிளவுபடுத்த தீபாவுக்கு ஆதரவு திரட்டுவதா? என அன்பரசன் தரப்பினர் ஆத்திரமடைந்தனர்.

தீபா ஆதரவாளர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். மாறி மாறி இருத்தரப்பினரும் தாக்கிக் கொண்டனர். இதில் தீபா ஆதரவாளர்கள் கார்மேகம், ஜேக்கப் உள்ளிட்டோர் காயமடைந்தனர். இதுகுறித்து தீபா ஆதரவாளர்கள் ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளித்தனர்.

மேலும் ஆம்பூர் டி.எஸ்.பி. கென்னடியிடமும் தீபா ஆதரவாளர்கள் புகார் அளித்தனர். இதேபோல் தீபா ஆதரவாளர்கள் தங்களை ஆபாசமாக பேசி தாக்கியதாகவும், தொண்டர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்திவ வருவதாகவும் அ.தி.மு.க. பிரமுகர் அன்பரசனும் டவுன் போலீசில் புகார் அளித்தார்.

இருத்தரப்பினரின் பரஸ்பர புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் விசாரித்து வருகிறார்கள். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News