செய்திகள்
குழந்தை ஹாத்திபா

கடலூரில் 2½ வயது குழந்தை கொலை: கள்ளக்காதல் ஜோடி கைது

Published On 2017-01-07 15:38 IST   |   Update On 2017-01-07 15:38:00 IST
கடலூரில் 2½ வயது குழந்தை கொலை வழக்கல் கள்ளக்காதல் ஜோடியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இச்சம்பம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர்:

கடலூர் மஞ்சக்குப்பம் புவனேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் முகமது அலி. இவர் தள்ளுவண்டியில் நூடுல்ஸ் வியாபாரம் செய்து வருகிறார். இவரது முதல் மனைவி ஆஷா. இவர்களுக்கு ஹாத்திபா என்ற 2½ வயது பெண் குழந்தை இருந்தது.

முகமது அலியை, ஆஷா கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். இதனால் முகமது அலி வேலூரை சேர்ந்த சகிலா பானுவை 2-வது திருமணம் செய்து கொண்டார். குழந்தை ஹாத்திபா முகமது அலியுடன் வசித்து வந்தது.

கடந்த 3-ந்தேதி ஹாத்திபாவை திடீரென்று காணவில்லை. பல இடங்களில் தேடியும் பலன்இல்லை. இந்நிலையில் முகமது அலி வீட்டின் தண்ணீர் தொட்டியில் ஹாத்திபா பிணமாக கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து குழந்தை ஹாத்திபாவின் உடலை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தை ஹாத்திபா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு தண்ணீர் தொட்டிக்குள் வீசப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து முகமது அலியின் 2-வது மனைவி சகிலா பானு மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் பூவராகவமூர்த்திக்கும், சகிலா பானுவுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதும், ஹாத்திபாவை பூவராகவமூர்த்தி கொலை செய்து தண்ணீர் தொட்டிக்குள் போட்டதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து சகிலா பானுவையும், பூவராகவமூர்த்தியையும் போலீசார் கைது செய்தனர்.

பெண் குழந்தை ஹாத்திபா கொலை செய்யப் பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்ட கள்ளக்காதல் ஜோடி பூவராகவமூர்த்தி, சகிலாபானு ஆகியோரிடம் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு நரசிம்மன், இன்ஸ்பெக்டர் வெற்றிச் செல்வன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

அப்போது குழந்தையை கொன்றது ஏன் என்று பூவராகவமூர்த்தி வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது வீட்டின் அருகே முகமது அலி வசித்து வருகிறார். கடந்த 2 மாதத்திற்கு முன்பு வேலூரை சேர்ந்த சகிலாபானுவை அவர் 2-வது திருமணம் செய்து அழைத்து வந்தார்.

முகமது அலியுடன் அவரது 2½ வயது மகள் ஹாத்திபாவும் இருந்து வந்தது.

சகிலாபானுவை நான் அடிக்கடி சந்தித்து பேசினேன். அப்போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது.

முகமது அலி வியாபாரம் தொடர்பாக காலையில் வீட்டில் இருந்து வெளியே சென்று விடுவார். அப்போது நான் முகமது அலி வீட்டுக்கு சென்று சகிலாபானுவுடன் உல்லாசமாக இருப்பேன்.

அதேபோல் கடந்த 3-ந் தேதி சகிலா பானு வீட்டுக்கு சென்றேன். சகிலா பானுவுடன் உல்லாசமாக இருந்தேன். அப்போது குழந்தை ஹாத்திபா எங்களை பார்த்து சத்தம் போட்டது. நாங்கள் உல்லாசமாக இருப்பதற்கு இடையூறாக இருந்தது.

எனவே குழந்தை ஹாத்திபாவின் கழுத்தை நெரித்துக் கொன்றேன். குழந்தையை மொட்டைமாடிக்கு தூக்கிச்சென்று அங்குள்ள தண்ணீர் தொட்டிக்குள் போட்டேன்.

பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டேன்.

இவ்வாறு போலீசில் பூவராகவமூர்த்தி வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.

Similar News