செய்திகள்

பயிர்கள் கருகியதால் மனவேதனை: 3 விவசாயிகள் பலி

Published On 2017-01-07 11:15 IST   |   Update On 2017-01-07 11:15:00 IST
கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் பயிர்கள் கருகியதால் மனவேதனை அடைந்த 3 விவசாயிகள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பண்ருட்டி,:

தமிழகத்தில் பருவமழை பெய்யாததால் விவசாய பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பண்ருட்டி அருகே உள்ள வீரப்பெருமாள் நல்லூரைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 45). இவர் தனது நிலத்தில் சவுக்கை உள்ளிட்ட பல்வேறு பயிர்களை விவசாயம் செய்திருந்தார். தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருகின. இதனால் மன வேதனை அடைந்த சங்கர் தனது நிலத்தில் வி‌ஷம் குடித்து இறந்து கிடந்தார். புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சங்கர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பண்ருட்டி அருகேயுள்ள மணம் தவழ்ந்தபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜகோபால் (60). வறட்சியினால் இவரது நிலத்தில் சாகுபடி செய்த கொய்யா விவசாயம் பொய்த்துப் போனதால் மனமுடைந்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அரசூர் பாரதி நகர் பகுதியை சேர்ந்த விவசாயி பெரியநாயகம் (வயது 52). இவர் அதே பகுதியில் உள்ள தனது நிலத்தில் நெல் மற்றும் உளுந்து பயிரிட்டு இருந்தார்.

இன்று காலை நிலத்திற்கு சென்ற அவர் பயிர்கள் கருகியதை கண்டு மன முடைந்தார்.

வீட்டிற்கு வந்த அவருக்கு சிறிது நேரத்தில் நெஞ்சு வலி ஏற்பட்டது. வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு இருவேல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பெரியநாயகம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News