செய்திகள்

கடலூரில் தொடர்ந்து கடல் சீற்றம்: மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை

Published On 2016-12-08 05:07 GMT   |   Update On 2016-12-08 05:07 GMT
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக மாற வாய்ப்பு உள்ளதால் கடலூரில் கடல் அதிக சீற்றமாக காணப்பட்டது.
கடலூர்:

தென்மேற்கு வங்கக்கடலில் கடந்த மாதம் 29-ந் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறியது.

‘நடா’ புயல் என்று பெயரிடப்பட்ட இந்த புயல் வலுவிழந்து காரைக்கால் அருகே கரையை கடந்தது.

இந்தநிலையில் தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டியுள்ள தெற்கு அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது.

இந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் புயலாக மாற வாய்ப்பு உள்ளது.

இதையொட்டி கடலூர் துறைமுகத்தில் நேற்று காலை 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. கடலூரில் கடல் அதிக சீற்றமாக காணப்பட்டது. ராட்சத அலைகள் எழுந்தன.

இன்று காலையிலும் கடல் அதிக சீற்றத்துடன் காணப்படுகிறது.

இதையொட்டி கடலூர் தேவனாம்பட்டினம், துறைமுகம், தாழங்குடா, ராசாப்பேட்டை, அக்கரக்கோரி, நல்லவாடு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்றும் மீன்பிடிக்க செல்லவில்லை.

இதனால் படகுகளை கடற்கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர்.

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலூர் மற்றும் நெல்லிக்குப்பத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மழை தூறிக்கொண்டே இருந்தது.

இன்று காலையிலும் லேசாக மழை பெய்தது. மேகம் மப்பும் மந்தாரமுமாக காட்சி தருகிறது. தொடர்ந்து குளிந்த காற்று வீசுகிறது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கடல் அதிக சீற்றத்துடன் காணப்படுகிறது. அதிக உயரத்துக்கு அலைகள் எழுகின்றன.

இதனால் மரக்காணம் எக்கியார் குப்பம், அனுமந்தை குப்பம், கூனிமேடு குப்பம் உள்பட 19 மீனவர் கிராமங்களை சேர்ந்த பெரும்பாலான மீனவர்கள் இன்று மீன்பிடிக்க செல்லவில்லை.

மரக்காணம் மற்றும் அதைசுற்றியுள்ள பகுதிகளில் இரவு 7 மணி முதல் காலை 9 மணி வரை அதிக அளவு பனி கொட்டுகிறது.

இதனால் பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

புதுவை மாநிலம் காரைக்காலில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. காரைக்கால் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மேகம் மப்பும் மந்தாரமாக காணப்படுகிறது. ஒரு சில மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

Similar News