செய்திகள்
நீலகண்டன்

ஜெயலலிதா உடல் நலம் பாதிப்பு: அ.தி.மு.க. நிர்வாகி அதிர்ச்சியில் பலி

Published On 2016-12-05 12:13 IST   |   Update On 2016-12-05 12:13:00 IST
ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட தகவல் அறிந்த அ.தி.மு.க. நிர்வாகி அதிர்ச்சியில் பலியான சம்பவம் பண்ருட்டியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பண்ருட்டி:

சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இந்த தகவல் அறிந்த அ.தி.மு.க.வினர் அதிர்ச்சி அடைந்தனர்.

ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர்.

ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட தகவல் பண்ருட்டி அருகேயுள்ள அண்ணாகிராமம் ஒன்றியம் சன்னியாசிப்பேட்டை காந்தி நகர் காலனியைச் சேர்ந்த ஜெயலலிதா பேரவை கிளைச் செயலாளர் நீலகண்டனுக்கு(வயது 40) தெரியவந்தது.

எனவே அவர் பதட்டத்துடன் காணப்பட்டார். கோவிலுக்குச் சென்று முதல்வர் விரைவில் குணமடைய வேண்டும் என்று வேண்டினார். அதன்பின்னர் யாருடனும் பேசாமல் இருந்தார்.

தொடர்ந்து வீட்டில் இருந்தபடியே டி.வி.பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென அவருக்கு நள்ளிரவில் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் நீலகண்டனை கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

நீலகண்டன் உடலுக்கு அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நீலகண்டனுக்கு ‌ஷகீலா என்ற மனைவியும், 3 மகன்கள், 1 மகள் உள்ளனர்.



Similar News