செய்திகள்
வீடுகளுக்கு முன்பு அகல் விளக்கேற்றி வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

நெல்லிக்குப்பம் அருகே ஆண்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று தகவல் பரவியதால் பரபரப்பு

Published On 2016-11-30 12:02 IST   |   Update On 2016-11-30 12:02:00 IST
நெல்லிக்குப்பம் அருகே அமாவாசை வந்த நேரம் சரியில்லை, இதனால் ஆண்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்:

கடலூர் அருகே நெல்லிக்குப்பத்தை அடுத்து வரக்கால்பட்டு பகுதி உள்ளது. இங்கு நேற்று அமாவாசை வந்த நேரம் சரியில்லை, இதனால் ஆண்களுக்கு ஆபத்து ஏற்படும் என்ற கருத்து மக்களிடையே பரவியது.

இதையடுத்து அந்த பகுதி பெண்கள் அங்குள்ள கோவில் அர்ச்சகரிடம் சென்று கேட்டனர். அதற்கு அவர் இந்த அமாவாசை வந்த நேரம் சரியில்லை, ஆண்களுக்கு ஆபத்து ஏற்படும்.

இதற்கு பரிகாரமாக வீட்டிற்கு வெளியில் வாழை இலையை வைத்து அதில் பச்சரிசி பரப்பி அதில் புதிய அகல் விளக்கு ஏற்றி வழிபடலாம். வீட்டில் எத்தனை ஆண்கள் இருக்கிறார்களோ அதற்கேற்றால் போல் அகல் விளக்கேற்றி வழிபடலாம் என்று கூறினார்.

மேலும் விளக்கேற்றிய போது பயன்படுத்திய வாழை இலை, பச்சரிசி, அகல் விளக்குகளை மறுநாள் காலையில் ஆறு, குளங்கள், கிணறு ஏதாவது ஒன்றில் விட வேண்டும் என்றும் கூறினார்.

இதை ஏற்றுக்கொண்ட அப்பகுதி பெண்கள் நேற்று மாலை தங்களது வீட்டின் முன்பு அகல் விளக்கேற்றி வழிபட்டனர்.

இதனால் அந்த பகுதி கார்த்திகை தீபம் ஏற்றியதுபோல் விளக்கொளியால் ஜொலித்தது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News