செய்திகள்

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் காதல் கணவருடன் போலீசில் தஞ்சம்

Published On 2016-11-25 18:12 IST   |   Update On 2016-11-25 18:12:00 IST
ஸ்ரீமுஷ்ணம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் காதல் கணவருடன் போலீசில் தஞ்சம் அடைந்தார்.

ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள நேமம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வநாதன். இவரது மகள் ரஞ்சிதா (வயது 21). இவருக்கும், விருத்தாசலம் அருகேயுள்ள மாத்தூரை சேர்ந்த சின்னசாமி மகன் குமரசாமி (24)-க்கும் கடந்த செப்டம்பர் மாதம் 24-ந் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிலையில் ரஞ்சிதா திடீரென மாயமானார்.

இது குறித்து செல்வநாதன் கொடுத்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரஞ்சிதாவை தேடி வந்தனர். இந்த நிலையில் ரஞ்சிதா தனது காதல் கணவருடன் கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தார்.

போலீசாரிடம் ரஞ்சிதா கூறுகையில், நானும், தீவளூர் கிராமத்தை சேர்ந்த செந்தமிழ் என்ற சாஸ்தா (24)வும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். ஆனால் எனது பெற்றோர், எனக்கு வேறொருவரை திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் செய்து விட்டனர். இருந்தபோதிலும் எப்படியாவது எனது காதலனை கரம்பிடிக்க நினைத்தேன்.

அதன்படி வீட்டை விட்டு வெளியேறி நானும், செந்தமிழும் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். போலீசார் தேடுவதை அறிந்ததும் தஞ்சம் அடைந்தேன் என்றார்.

இதையடுத்து இருவீட்டு பெற்றோரையும் நேரில் அழைத்து போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். ரஞ்சிதா, அவரது காதல் கணவருடன் குடும்பம் நடத்த புறப்பட்டுச் சென்றார்.

Similar News