செய்திகள்

கடலூர் மாவட்டத்தை கலக்கிய 2 கொள்ளையர்கள் கைது

Published On 2016-11-13 22:01 IST   |   Update On 2016-11-13 22:01:00 IST
கடலூர் மாவட்டத்தை கலக்கிய 2 கொள்ளையர்களை போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.

கடலூர்:

கடலூர், நெல்லிக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், கடலூர் முதுநகர், காட்டு மன்னார்கோவில், மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் வீடுகளில் நகை-பணம் கொள்ளை போவது தொடர்ச்சியாக நடைபெற்றது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டது.

கொள்ளையில் ஈடுபடுவோரை உடனடியாக கைது செய்யுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து கடலூர் டெல்டா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கடலூர் வண்டிப்பாளையத்தைச் சேர்ந்த முருகன் (வயது 29) மற்றும் காட்டு மன்னார்கோவில் மா.கொளக்குடியைச் சேர்ந்த ரமேஷ் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

பின்னர் கடலூர் முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிபாபுவிடம் ஒப்படைத்தனர். முருகன், ரமேஷ் ஆகியோரிடம் போலீசார் விசாரணை செய்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

கடலூர் மாவட்டத்தில் 25-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளில் முருகனுக்கும், ரமேசுக்கும் தொடர்பு உள்ளதும், ஒரத்தூர் போலீஸ் நிலையத்தில் நகை பறித்த வழக்கு மற்றும் விருத்தாசலத்தில் ஒரு பெண்ணை 13 பேர் சேர்ந்து கற்பழித்த வழக்கிலும் ரமேஷ் சம்பந்தப்பட்டவன் என்றும் விசாரணையில் தெரியவந்தது.

இவர்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் 100 கிராம் தங்கம், 133 கிராம் வெள்ளி, 22 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். பின்னர் 2 பேரையும் கடலூர் முதுநகர் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Similar News