செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே கை, கால்-கண்ணை கட்டி வாலிபர் கொடூர கொலை: போலீசார் விசாரணை

Published On 2016-10-20 06:53 GMT   |   Update On 2016-10-20 06:53 GMT
ஸ்ரீபெரும்புதூர் அருகே கொடூரமாக வாலிபர் கொன்று வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீபெரும்புதூர்:

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாத்தூர், சிங்கப்பெருமாள் கோவில் நெடுஞ்சாலையில் விநாயகர் கோவில் உள்ளது. இதன் அருகே இன்று காலை சாலையோரத்தில் வாலிபர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

அவரது கை, கால் மற்றும் கண் துணியால் கட்டப்பட்டு இருந்தது. உடல் முழுவதும் பலத்த வெட்டுக் காயங்கள் இருந்தன. தலைப்பகுதி முழுவதும் சிதைக்கப்பட்டு இருந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஒரகடம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

கொலையுண்டவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. அவருக்கு சுமார் 30 வயது இருக்கும். சட்டை இல்லை. ஜீன்ஸ் பேண்ட் மட்டும் அணிந்து இருந்தார்.

மர்ம நபர்கள் அவரை கடத்தி சென்று கொடூரமாக வெட்டி கொலை செய்து வீசி இருப்பது தெரிந்தது. கொலை செய்யப்பட்டது சென்னை அல்லது காஞ்சீபுரத்தை சேர்ந்த வாலிபராக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இது தொடர்பாக கடந்த வாரத்தில் மாயமானவர்கள் பற்றிய விபரத்தை சேகரித்து வருகிறார்கள். நள்ளிரவில் ஒரகடம் பகுதியில் வந்து சென்ற வாகனங்கள் குறித்தும் விசாரணை நடக்கிறது.

கொடூரமாக வாலிபர் கொன்று வீசப்பட்ட சம்பவம் ஒரகடம் பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News