செய்திகள்

குவைத்தில் இறந்த கணவர் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் பெண் மனு

Published On 2016-08-24 11:44 IST   |   Update On 2016-08-24 11:44:00 IST
குவைத்தில் இறந்த கணவர் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி காஞ்சீபுரம் கலெக்டரிடம் பெண் மனு அளித்துள்ளார்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் கல்பாக்கம் அடுத்த வாயலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கவிசியாமளா. இவர் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டரிடம் கண்ணீர் மல்க மனு ஒன்றை அளித்தார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:-

எனது கணவர் முத்துவேல் ராஜா (27). குவைத் நாட்டிற்கு இரண்டு ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் டிரைவர் வேலைக்கு முருகானந்தம் என்பவர் அவரை அழைத்து சென்றார்.

மாதம் 30 ஆயிரம் சம்பளம் என கூறிய அவரிடம் இந்த வேலைக்காக 1 லட்ச ரூபாய் கொடுத்தோம். கடந்த மாதம் வெளிநாடு சென்ற எனது கணவர் கடந்த 1-ந் தேதி முதல் என்னுடன் பேசவில்லை.

மேலும் அதற்குமுன் பேசுகையில் தன்னுடன் தங்கியிருந்த முருகானந்தம் சண்டையிட்டதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் எனது கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த திங்கட்கிழமை (22-ந் தேதி) மாலை 4 மணிக்கு இறந்ததாக எனக்கு தகவல் கிடைத்தது.

எனது கணவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் வருகிறது. நான் 3 குழந்தைகளுடன் மிகவும் கஷ்டத்தில் உள்ளேன். எனது கணவர் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவி செய்ய வேண்டும். ஏழ்மையான நிலையில் உள்ள எங்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.

Similar News