செய்திகள்

ஈரோட்டில் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை நடைமுறை படுத்தக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Published On 2016-08-23 15:25 IST   |   Update On 2016-08-23 15:25:00 IST
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை நடைமுறை படுத்தக்கோரி ஈரோட்டில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஈரோடு:

கீழ்பவானி பாசன சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஈரோடு காளை மாடு சிலை அருகே கோரிக்கை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு படி பாசன திட்டங்களுக்கு நீர்பகிர்மானம் செய்ய வேண்டும். பவானி பாசனங்கள் அனைத்துக்கும் ஒரே நேரத்தில் தண்ணீர் திறக்க வேண்டும்.

பவானிசாகர் அணையில் போதுமான நீர் இருப்பு இருக்கும் வரை தண்ணீர் திறக்க கூடாது. கீழ்பவானி பாசனத்தை வஞ்சிக்க கூடாது என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

கூட்டமைப்பின் தலைவர் காசியண்ணன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முத்துசாமி வரவேற்றார்.

இதில் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் முன்னாள் எம்.பி. கணேசமூர்த்தி, பா.ம.க. மாநில துணை தலைவர் வடிவேல் மற்றும் விவசாயிகள் சங்க தலைவர் ரத்தினசாமி, கீழ்பவானி பாசன விவசாயிகள் நல சங்க தலைவர் நல்லசாமி, கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு செயலாளர் வடிவேல், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் துளசிமணி மற்றும் கீழ்பவானி பாசனத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்த கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

‘‘நஞ்சை பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடு’’ ‘‘காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை நடைமுறை படுத்து’’ ‘‘கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம் பொதுப் பணித் துறையின் தவறான நீர் பங்கீட்டை கண்டிக்கிறோம்’’ போன்ற கோ‌ஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையொட்டி மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சம்பத் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Similar News