செய்திகள்

காவல்துறை மானிய விவாதத்தில் எதிர்க்கட்சிகள் பங்கேற்க சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன் பேட்டி

Published On 2016-08-18 07:53 IST   |   Update On 2016-08-18 15:31:00 IST
சட்டசபையில் காவல்துறை மானிய விவாதத்தில் எதிர்க்கட்சிகள் பங்கேற்க சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி.கே.வாசன் கூறினார்.
ஆலந்தூர்:

சட்டசபையில் காவல்துறை மானிய விவாதத்தில் எதிர்க்கட்சிகள் பங்கேற்க சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி.கே.வாசன் கூறினார்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், நேற்று மாலை கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக சட்டசபையில் மசோதாக்கள் குறித்து விவாதங்கள் நடந்து வருகிறது. ஆளுங்கட்சியினர் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர், உறுப்பினர்களை பேசவிடாமல் தடுத்து வருவது வழக்கமாகிவிட்டது. சட்டசபையில் விவாதத்தின் போது எதிர்க்கட்சி தலைவர், உறுப்பினர்களை சபை காவலர்கள் மூலம் வெளியேற்றப்பட்டது ஏற்புடையதல்ல.

சட்டசபையில் மக்கள் பணிகளை சட்டமன்ற உறுப்பினர்கள் செய்யவிடாமல் தடுப்பது போன்று உள்ளது. சட்டமன்றத்தில் ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் சபாநாயகர் நடுநிலையுடன் இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமாக உள்ளது. ஆனால் கடந்த ஒரு வாரமாக சபாநாயகர் ஒருதலைபட்சமாக செயல்படுவது ஏற்புடையதல்ல.

மசோதாக்கள் மீது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச அதிக நேரம் ஒதுக்கவேண்டும். முக்கிய மசோதாக்களில் உறுப்பினர்களை பேசவிடாமல் ஒரு வாரம் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளது. இந்த முடிவை சபாநாயகர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

காவல்துறை மானியம் என்பது முக்கியமானது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக சட்டம், ஒழுங்கு நிலை கேள்வி குறியாக உள்ளது. தொடர்ந்து கொலை, கொள்ளைகள் நடந்து வருகிறது. காவல்துறை மானியத்தில் எதிர்க்கட்சிகளின் பங்கு முக்கியமானது. அதில் அவர்கள் கலந்து கொண்டு பேசவேண்டும். விவாதம் செய்யவேண்டும். உண்மை நிலையை மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும். இதுபோன்ற ஜனநாயக சட்டமன்றத்தில் நல்லநிலையை ஏற்படுத்த சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எங்களது வேண்டுகோள்.

இவ்வாறு அவர் கூறினார்.
   

Similar News