செய்திகள்

கரும்பு நிலுவைத் தொகையை வழங்காவிட்டால் பிச்சை எடுக்கும் போராட்டம்: விவசாயிகள் அறிவிப்பு

Published On 2016-07-28 10:37 IST   |   Update On 2016-07-28 10:37:00 IST
கரும்பு நிலுவைத் தொகையை வழங்காவிட்டால் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்துவோம் என கரும்பு விவசாயிகள் கூட்டு குழு இயக்கத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சேத்தியாத்தோப்பு:

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பிய ஏராளமான விவசாயிகளுக்கு அதற்கான நிலுவை தொகை வழங்கப்படவில்லை. இதனால் சோழத்தரம், ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை, கானூர், பேரூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பாதிக்கப்பட்ட விவசாயிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகள் கூட்டு குழு இயக்கம் சார்பில் நடந்த இந்த கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ஆண்டவர்செல்வம் தலைமை தாங்கினார். கரும்பு விவசாயிகள் இளவரசன், அண்ணாதுரை, தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செந்தில்ராயர் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

2015-16-ம் ஆண்டு அரவை பருவத்திற்கு டன் ஒன்றுக்கு ரூ.2,750 வீதம் தரவேண்டிய நிலுவை தொகை ரூ.27 கோடியை உடனடியாக வழங்க வேண்டும். 2014-2015-ம் ஆண்டு அரவை பருவத்தில் கரும்பிற்கான மாநில அரசு பரிந்துரை செய்த நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும். 2004-2005 மற்றும் 2008-2009-ம் ஆண்டுகளுக்கான லாபத்தில் பங்கு தொகையான ரூ.5 கோடியே 14 லட்சத்தை நீதிமன்ற உத்தரவுப்படி விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

ஆலையில் கடந்த 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும். ஆலையின் நுழைவு வாயில் முதல் எடை மேடை வரை, கரும்பு தளம் மற்றும் தார் சாலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 10-ந் தேதி (புதன்கிழமை) சோழத்தரம் கடைவீதியில் விவசாயிகள் அரை நிர்வாணமாக பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்துவோம்.

மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் ராஜதுரை, வெற்றிவேல், வையாபுரி, ராயர், முருகானந்தம், செந்தில்குமார், ராமசிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News