செய்திகள்

திம்பம் மலைப்பாதையில் ரோட்டில் நடமாடும் சிறுத்தைகள்: வாகனங்களை நிறுத்த வேண்டாமென அறிவுரை

Published On 2016-06-28 15:02 IST   |   Update On 2016-06-28 15:02:00 IST
திம்பம் மலைப்பாதையில் நள்ளிரவில் ரோட்டில் சிறுத்தைகள் நடமாடுவதால் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என வனத்துறையினர் என அறிவுறுத்தி உள்ளனர்.
சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் வனப்பகுதி திம்பம் மலைப்பாதையில் குரங்குகள் மற்றும் அவ்வப்போது மான்கள் நடமாட்டம் இருக்கும். இந்த நிலையில் தான் திம்பம் மலைப்பாதையில் சிறுத்தைகள் சர்வ சாதாரணமாக நடமாட தொடங்கியது.

திம்பம் வன சோதனைச்சாவடி ஊழியர் கிருஷ்ணன் உள்பட 3 பேரை சிறுத்தை கொன்றது. இதனால் ஏற்பட்ட உச்சகட்ட பீதியில் வனத் துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்தினர். மாலை 6 மணிக்கு மேல் இரு சக்கர வாகனங்களுக்கு தடை விதித்தனர்.

நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் எக்காரணம் கொண்டும் இறங்க வேண்டாம் என வனத் துறையினர் எச்சரித்தனர். இந்த விழிப்புணர்வு மூலம் சிறுத்தைகளின் தாக்குதலில் இருந்து மக்கள் தப்பினர்.

இந்த நிலையில் திம்பம் மலைப்பாதையில் சிறுத்தைகளின் நடமாட்டம் குறைந்திருந்தது. எனினும் தொடர்ந்து காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் திம்பம் மலை பாதையில் இரு சக்கர வாகனங்களுக்கு தொடர்ந்து தடை நீடிக்கிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக திம்பம் மலைப் பாதையில் நள்ளிரவு சிறுத்தைகள் நடமாட்டத்தை வாகன ஓட்டிகள் பார்த்து உள்ளனர்.

கடந்த 25-ந் தேதி கோவையில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு ஒரு குடும்பத்தினர் காரில் சென்று உள்ளனர். இவர்கள் நள்ளிரவு 11.30 மணிக்கு திம்பம் மலைப் பாதை 24-வது சுற்றில் சென்ற போது மலையின் மேற்புற பகுதியில் விருட்டென்று ஒரு சிறுத்தை ரோட்டில் பாய்ந்து மலையின் கீழ் பகுதிக்கு ஓடியதை கண்டு திடுக்கிட்டனர். இதனால் திம்பம் மலைப் பாதையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது மீண்டும் தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே வனத்துறையினர் ‘‘திம்பம் மலைப்பாதை தொடர்ந்து அபாய பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இரவு நேரத்தில் வாகனங்களை மலைப் பாதையில் நிறுத்த வேண்டாம். இயற்கை உபாதை கழிக்க கூட யாரும் வண்டியை விட்டு இறங்க வேண்டாம்’’ என அறிவுறுத்தி உள்ளனர்.

Similar News