செய்திகள்

சுனாமியால் தந்தை பாதிப்பு: 2 மாணவிகள் படிப்புக்கு கலெக்டர் கஜலட்சுமி உதவி

Published On 2016-06-12 12:07 IST   |   Update On 2016-06-12 12:07:00 IST
சுனாமியால் பாதிக்கப்பட்டவரின் 2 மகள்களின் கல்வி செலவை கலெக்டர் கஜலட்சுமி ஏற்றுள்ளார். மேலும் வீட்டுமனைப்பட்டா கிடைக்கவும் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து இருக்கிறார்.
காஞ்சீபுரம்:

தமிழகத்தில் கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி தாக்குதலில் காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரம், கல்பாக்கம், சதுரங்கப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்பட்டன.

300-க்கும் மேற்பட்டோர் ஆழிப்பேரலையில் சிக்கினர். இவர்களில் 73 பேர் உடல் மட்டும் மீட்கப்பட்டது. மற்றவர்கள் என்ன ஆனார்கள் என்பது இதுவரை தெரியவில்லை.

இதற்கிடையே கானத்தூரை அடுத்த கானத்து ரெட்டிகுப்பத்தில் சுனாமி அலையில் சிக்கி மணலில் புதைந்த மீனவர் சண்முக வேலை மீட்பு குழுவினர் உயிரோடு மீட்டனர். ஆனால் அவரது உடல் உறுப்புகள் செயல் இழந்து இருந்தது.

அவருக்கு அரசின் உதவிகள் ரூ. 25 ஆயிரம் மற்றும் வீட்டு மனைப்பட்டா வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சண்முகவேலுக்கு அரசின் உதவிகள் கிடைக்கவில்லை.

உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டதால் அவரால் பழையபடி மீன்பிடி தொழில் செய்ய முடியவில்லை. இதனால் மனைவி மற்றும் 3 மகள், ஒரு மகனுடன் மிகவும் கஷ்டப்பட்டார். படிப்பு செலவுக்கே திண்டாடும் நிலை உருவானது.

இதுகுறித்து காஞ்சீபுரம் கலெக்டர் கஜலட்சுமியின் நேரடி கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. சண்முகவேலின் நிலையை அறிந்த கலெக்டர் கஜலட்சுமி அவருக்கு தனிப்பட்ட மனிதாபிமான முறையில் உதவி செய்ய முடிவு செய்தார்.

இதையடுத்து சண்முகவேலின் 2-வது மகள் மஞ்சுளாவின் பட்டப்படிப்பு மற்றும் 3-வது மகள் யுவஸ்ரீயின் கல்விச் செலவு தொகை ரூ. 55 ஆயிரத்தை தான் ஏற்பதாக கூறினார். மேலும் வீட்டுமனைப்பட்டா கிடைக்கவும் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து சண்முகவேல் கூறியதாவது:-

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த நான் பிழைப்புக்காக கானத்துரெட்டி குப்பத்துக்கு வந்தேன். மீன்பிடி தொழிலில் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை நடத்தினேன்.

சுனாமி தாக்குதலில் மண்ணில் புதைந்த என்னை மீட்பு குழுவினர் மீட்டனர். உடல் உறுப்புகள் செயல் இழந்ததால் பழையபடி என்னால் மீன்பிடி தொழில் செய்ய முடியாது என டாக்டர்கள் தெரிவித்தனர். அரசு அறிவித்த நிவாரண உதவி தொகை, வீட்டு மனைப் பட்டா கிடைக்கவில்லை.

போதிய வருமானம் இல்லாததால் மகள்களை படிக்க வைக்கவும், குடும்ப செலவுக்கு பணம் இல்லாமலும் கஷ்டப்பட்டேன்.

எனது நிலையை அறிந்த கலெக்டர் கஜலட்சுமி எங்களுக்கு உதவி இருக்கிறார். 2 மகள்களின் கல்விச் செலவை ஏற்பதாகவும் மற்றும் வீட்டு வாடகைக்கு ரூ. 10 ஆயிரத்து 500-ம் வழங்கினார். அவருக்கு எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுபற்றி கலெக்டர் கஜலட்சுமி கூறும்போது, “சுனாமியால் பாதிக்கப்பட்ட சண்முகவேலுக்கு மனிதாபிமான முறையில் அவரது மகள்களின் கல்வி செலவை ஏற்றுள்ளேன். மேலும் மூத்த மகளுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

சண்முகவேல் தற்போது வாடகை வீட்டில் வசித்து வருகிறார். வருவாய்த்துறையினர் மூலம் ஆய்வு செய்து அவருக்கு அதே பகுதியில் வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Similar News