செய்திகள்

புதுக்கோட்டை அருகே 5 பேர் பலியான விபத்தில் அரசு பஸ் டிரைவர் கைது

Published On 2016-06-06 15:14 IST   |   Update On 2016-06-06 15:14:00 IST
புதுக்கோட்டை அருகே நார்த்தாமலையில் நேற்று நடைபெற்ற பயங்கர சாலை விபத்தில் குழந்தை உள்பட 5 பேர் பலியானதால், அரசு பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை:

திருச்சி சீனிவாசா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜீவ ராணி (வயது 35). இவர் தனது உறவினர்கள் சஜீதா (18), ஹேமா (22) உள்பட 11 பேருடன் நேற்று காலை புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலுக்கு சுற்றுலா சென்றார். அங்கு பொழுதை கழித்த அவர்கள் இரவு திருச்சிக்கு காரில் புறப்பட்டனர். காரை ரஜீவன் (30) ஓட்டினார்.

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது, அந்த வழியாக புதுக்கோட்டையில் இருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக காரின் பின்புறம் மோதியது.

இதில் கார் 20 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு சுக்கு நூறாக நொறுங்கியது. காரில் இருந்தவர்கள் இடி பாடுகளுக்கிடையே சிக்கி உயிருக்கு போராடினார்கள்.

இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் காரில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இது குறித்த தகவல் அறிந்ததும் கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்களும் பொதுமக்களுடன் சேர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கார் டிரைவர் ரஜீவன் மற்றும் காரில் இருந்த கிருபா(8), சஜீதா(18) ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகியது தெரியவந்தது. மேலும் ஜீவராணி, ஹேமா (22), சர்மிளா (21), சஞ்சீவ்(12), வரூண், ரோமிலா, சஞ்சை, பாலதரணி ஆகிய 8 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் ஜீவராணி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

மற்ற 7 பேரும் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் போகும் வழியில் ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆனது.

விபத்து நிகழ்ந்தது எப்படி என்று தெரியவில்லை. அரசு பஸ் அதிவேகமாக வந்ததன் காரணமாக காரின் பின்புறம் மோதி விபத்து நிகழ்ந்ததாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும் ஆத்திரத்தில் பஸ்சை அடித்து நொறுக்கினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. மற்றொரு பஸ்சையும் கல் வீசி தாக்கினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு கலெக்டர் கணேஷ் சென்று மீட்பு பணியை விரைவுப்படுத்தினார்.

நார்த்தாமலை பஸ் ஸ்டாப் பகுதியில் கடந்த 6 மாதத்தில் 7 முறை கோர விபத்துகள் நடந்துள்ளது. இதில் பலர் உயிரிழந்துள்ளனர். எனவே விபத்துகளை தடுக்க அப்பகுதியில் வேதத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் அவர்களது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் பலியானவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

விபத்து தொடர்பாக அரசு பஸ் டிரைவர் துவரங்குறிச்சியை சேர்ந்த கண்ணன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News