விளையாட்டு

புரோ ஹாக்கி லீக்: ஸ்பெயினுக்கு இந்தியா பதிலடி

Published On 2025-02-17 10:40 IST   |   Update On 2025-02-17 10:40:00 IST
  • ஸ்பெயினிடம் 1-3 என்ற கணக்கில் முந்தைய நாளில் இந்திய அணி தோல்வியை தழுவியது.
  • அதற்கு சுடச்சுட இந்திய அணி பதிலடி கொடுத்து விட்டது.

புவனேஷ்வர்:

6-வது புரோ ஹாக்கி லீக் தொடர் பல்வேறு நாட்டில் நடந்து வருகிறது. இதில் ஒடிசாவின் புவனேஷ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஸ்பெயினை எதிர்கொண்டது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களம் புகுந்த இந்திய வீரர்களால் முதல் பாதியில் கோல் அடிக்க முடியவில்லை.

பிற்பாதியில் தாக்குதல் பாணியை தீவிரப்படுத்திய இந்திய அணிக்கு 32-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் கிடைத்தது. அதை பயன்படுத்தி மன்தீப் சிங் கோல் அடித்தார். 39-வது நிமிடத்தில் மற்றொரு இந்திய வீரர் தில்பிரீத் கோல் போட்டு முன்னிலையை வலுப்படுத்தினார்.

முடிவில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை சாய்த்தது. முந்தைய நாள் இதே ஸ்பெயினிடம் 1-3 என்ற கணக்கில் தோல்வியை தழுவிய இந்திய அணி, அதற்கு சுடச்சுட பதிலடி கொடுத்து விட்டது. இந்தியா தனது அடுத்த லீக் ஆட்டத்தில் ஜெர்மனியை நாளை சந்திக்கிறது.

இதன் பெண்கள் பிரிவில் இந்திய அணி, இங்கிலாந்துடன் மோதியது. பரபரப்பான இந்த ஆட்டம் வழக்கமான நேரத்தில் 2-2 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது. இந்திய தரப்பில் நவ்னீத் கவுர், ருதஜா ததாசோ பிசல் கோல் அடித்தனர்.

இதையடுத்து வெற்றி தோல்வியை நிர்ணயிக்க ஷூட்-அவுட் விதி கடைபிடிக்கப்பட்டது. இதில் இங்கிலாந்து 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை தோற்கடித்தது. இந்திய பெண்கள் அணி அடுத்த ஆட்டத்தில் ஸ்பெயினுடன் நாளை மல்லுக்கட்டுகிறது.

Tags:    

Similar News