விளையாட்டு
பும்ரா, கோலி

100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது கடின உழைப்புக்கு கிடைத்த சான்று - கோலி குறித்து பும்ரா புகழாரம்

Published On 2022-03-02 06:23 IST   |   Update On 2022-03-02 06:23:00 IST
மொகாலியில்,இந்திய அணி வெற்றி பெற்றால் அது கோலிக்கு மிகப் பெரிய பரிசாக அமையும் என்று பும்ரா குறிப்பிட்டுள்ளார்.
மொகாலி:

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் வெள்ளிக்கிழமை பஞ்சாப் மாநிலம் மொகாலியில் தொடங்குகிறது. 

இது முன்னாள் கேப்டன் விராட் கோலி விளையாடும் 100-வது டெஸ்ட் போட்டி. இந்த போட்டியை காண ரசிகர்கள் அனுமதிக்கப் படுவார்கள் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்திய அணியின் துணை கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான ஜஸ்பிரித் பும்ரா, கோலியின் 100 டெஸ்ட் போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியுள்ளதாவது:

தேசத்துக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது என்பது உண்மையிலேயே ஒரு வீரருக்கு சிறப்பு வாய்ந்த சாதனை. இது அவரது கடின உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் கிடைத்த சான்று. அவருக்கு இது இன்னொரு பெருமைப் படத்தக்க சாதனையாகும். 

விராட் கோலி இந்திய அணியின் வெற்றிக்காக ஏராளமான பங்களிப்பை அளித்திருக்கிறார். அவருக்கு வாழ்த்துகள். இந்திய அணி வெற்றி பெற்றால் அதை விட அவருக்கு பெரிய பரிசு எதுவும் இருக்க முடியாது. இவ்வாறு பும்ரா தெரிவித்துள்ளார்.

Similar News